கடல் போல காட்சி தரும் பவானிசாகர் அணை...100 அடியை எட்டிய நீர்மட்டம் - உபரி நீர் வெளியேற்றம்
பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 3,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. பில்லூர் அணையில் நிரம்பிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டு பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.
பவானி சாகர் அணையின் நீர் மட்டம் கடந்த 23ஆம் தேதி 97 அடியாக இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து ஞாயிறன்று மாலை 100 அடியை எட்டியது.
தமிழகத்தில் அதி கனமழை : குமரி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கடலாக காட்சி தரும் பவானி சாகர்
பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானி சாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானி சாகர் அணை 27வது முறையாக 100 அடியை எட்டி கடலென காட்சி தருகிறது.
உபரி நீர் வெளியேற்றம்
அணையின் பாதுகாப்புக் கருதி, பவானி ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டவுடன், உபரி நீர் திறக்கப்படும் என்பதால், கடந்த இரு நாட்களாகவே, கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் தண்ணீர்
தற்போது அணையின் கீழ் மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் இருக்குமானால் அணையின் மேல்மதகுகள் மூலம் உபரி நீர் கூடுதலாக திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம்
பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வானப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பவானி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றின் அருகில் அனுமதிக்கவோ வேண்டாம் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.