அதே ஈரோடு.. அதே இளங்கோவன்.. யாரது? அண்ணாமலையின் “பக்கா டைமிங்”.. அறியப்படாத அதிசய மனிதர் என வாழ்த்து
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில் ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் இளங்கோவனை பாராட்டியுள்ளார் அண்ணாமலை
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோட்டை சேர்ந்த இளங்கோவன் என்ற சமூக ஆர்வலர் குறித்து ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டு இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில் அண்ணாமலையின் இந்த பதிவு பேசுபொருளாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாள் குறித்த காங்கிரஸ்.. பிப்.3ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்?
ஈவிகேஎஸ் இளங்கோவன்
திமுக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக அறிவித்து உள்ளது. மறுபக்கம் அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி குழப்பங்களால் தேர்தலில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.
அண்ணாமலை ட்விட்டர் பதிவு
அதே நேரம் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இதில் போட்டியிட முனைப்பு காட்டி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அண்ணாமலை இதில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவு பேசுபொருளாகி இருக்கிறது.
அறியப்படாத அதிசய மனிதர்கள்
அண்ணாமலை ட்விட்டரில் தினசரி "அறியப்படாத அதிசய மனிதர்கள்" என்ற தலைப்பில் சமூக சேவகர்கள், சாதனையாளர்களை பாராட்டி பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஈரோட்டை சேர்ந்த இளங்கோவன் என்ற நபர் பற்றி அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு இருப்பது இந்த இடைத்தேர்தல் சூழல் டைமிங்கில் வந்துள்ளதாக பலர் கருத்திட்டு வருகிறார்கள்.
யார் இந்த ஈரோடு இளங்கோவன்?
அண்ணாமலை வெளியிட்டுள்ள அந்த பதிவில், "நம் சமூகத்திற்கும் வரும் தலைமுறையினருக்கும் நல்ல காற்றும், மழையும் கிடைக்க வழிவகை செய்திடுவோம் என்கிறார் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர் திரு.இளங்கோவன் அவர்கள். மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வரும் நிலையில், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர் 'பசுமை விதைகள்' என்ற அமைப்பை நிறுவி இந்த குழுவினர் மூலம் ஈரோடு மாநகர் முழுவதும் மரக்கன்றுகளை விதைத்தும், பராமரித்தும் வருகின்றார்.
பசுமை விதைகள் அமைப்பு
7 நபர்களுடன் துவங்கப்பட்ட இந்த இயக்கத்தில் தற்போது 90 நபர்கள் வரை பயணிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கியும் வளர்ப்பு குறித்து எடுத்துரைத்தும் வருகின்றனர். இதுவரை 3250 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் வழங்கியிருக்கிறார்கள்.
மரக்கன்றுகள் நடும் பணி
டிசம்பர் 2022 வரை 6250 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விதைத்து சுற்றுசூழலுக்கு பெரும்பணியை ஆற்றி இருக்கிறார்கள். இதில் அதிக அளவில் நாட்டு மரக்கன்றுகள் விதைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவைகள் வேம்பு, புங்கன், மகிழம், நாவல், பாதம், பூவரசு, கொடுக்காப்புளி, மா, பூமருது, மலைவேம்பு, வாதநாராயணன் மற்றும் வாகை போன்ற அதிக ஆக்சிஜன் தரக்கூடிய மரங்களை நட்டு வருகிறார்கள்.
பசுமை ஈரோடு
ஈரோட்டு மாவட்டத்தை பசுமையாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். 'பசுமை விதைகள்' அமைப்பின் நலன் நோக்கம் ஈடேற எனது பிரார்த்தனைகள் நிச்சயம் இருக்கும் என்பதை தெரிவிப்பதோடு சகோதரர் திரு. இளங்கோவன் அவர்களின் சமூக பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.