இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை.. ஆதரவு இவருக்குத்தான்..அண்ணாமலை ஆலோசனையில் நடந்தது என்ன? பின்னணி
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அக்கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரத்தில் இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர் செல்வம் ஆகியோரில் யாருக்கு கிடைக்கும்? என்பது பற்றிய புதிய தகவலும் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 2 வெளிமாநில அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமனம்.. யார் இவர்கள்?பின்னணி
பாஜக நிலைப்பாட்டில் மாற்றம்
இந்த தேர்தலில் பாஜக போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின. அதோடு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் பாஜக சார்பில் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை என்பது பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலுக்கு வலு சேர்த்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து பாஜகவின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் பாஜகவின் நிலைப்பாடு மாற தொடங்கியது.
ஆதரவு கோரிய ஈபிஎஸ்-ஓபிஎஸ்
அதிமுக சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அடுத்தடுத்து அறிவித்தனர். மேலும் இருதரப்பும் கமலாலயம் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள், பொறுப்பாளர்களை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரினர். இதில் இன்னும் பாஜக எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. அதாவது இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுகிறதா? இல்லையா? என்பதையும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோரில் யாருக்கு ஆதரவு என்பதையும் பாஜக இன்னும் வெளிப்படுத்தவில்லை. இதில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகின்றன.
அண்ணாமலை தலைமையில் ஆலோசனை
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி பாஜக. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில மைய குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாஜக போட்டியில்லை
இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது 50 சதவீதம் பேர் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பாஜக தலைமை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. அதாவது தற்போதைய இடைத்தேர்தல் களம் சாதகமானதாக இல்லை. பாஜக போட்டியிடுவதற்கான சூழல் இல்லை என கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.
ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸில் ஆதரவு யாருக்கு?
மேலும் பாஜக தேர்தலில் போட்டியிடாவிட்டால் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஓ பன்னீர் செல்வம் ஆகியோரில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதில் அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்த பிறகு அதனடிப்படையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் பற்றி ஆலோசனை
மேலும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு அப்பாற்பட்டு 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தான் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் இப்போது இருந்தே தயாராக வேண்டும். பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொள்ள வேண்டும். கட்சிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
நடைப்பயணம் பற்றி விவாதம்
இதுதவிர ஏப்ரல் மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளுக்கும் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடைப்பயணம் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த நடைப்பயணம் மொத்தம் 471 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நடைப்பயணத்துக்கான ஏற்பாடுகள், தங்கும் இடங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாராயண் திருப்பதி சொன்னது என்ன?
இருப்பினும் கூட ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‛‛ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக கூட்டணி கட்சிகள் மக்களிடம் பணத்தை எப்படி வினியோகம் செய்யலாம் என ஆலோசிக்கின்றன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக 2 நாளில் முடிவு எடுக்கும் '' என்றார்.