கீழிறங்கியது வைகோவின் கருப்புக்கொடி... உயர, உயர பறக்கிறது காவிக்கொடி... தமிழிசை தடாலடி
ஈரோடு : வைகோ காட்டும் கருப்புக் கொடி சிறிதுசிறிதாக கீழிறங்கி காவிக்கொடியாக பறப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, சமானிய மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ கருப்பு கொடி காட்டுவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு சமம்.
எனவே அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வைகோ காட்டும் கருப்புக் கொடி சிறிது சிறிதாக கீழிறங்கி காவிக்கொடி உயர உயர பறக்கிறது. கொங்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி பலம் பொருந்திய கட்சியாக உள்ளது.
இணைந்தால் நல்லது
ஏழைக்குடும்பங்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டம் நல்ல திட்டம். இந்த திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் பழனிசாமியை மனதார பாராட்டுகிறேன். இதேபோல் பிரதமர் மோடியும், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். எனவே மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதால் தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்களின் பலன்கள் கிடைத்து வருகிறது..
கூட்டணி பேச்சுவார்த்தை
பாஜக - அதிமுகவிற்கு பொது எதிரி திமுகவும், காங்கிரசும் தான். இவர்களுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், யாரெல்லாம் இணைந்து வருகிறார்களோ, அவர்களைச் சேர்த்துக் கொள்வோம். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளைத் தவிர இதர கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எந்தெந்த கட்சி என்பதை விரைவில் அறிவிப்போம். தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். தமிழகத்தில் பிரமாண்டமான ஒரு திருப்புமுனையை நாங்கள் ஏற்படுத்துவோம்.
மீண்டும் மோடி
நேர்மையானவரான மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என உத்தர பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதி முலாயம் சிங் யாதவ், கூறியுள்ளார். எனவே இதனை ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.நாட்டின் பிரதமராக மோடி வருவதை யாராலும் தடுக்க முடியாது.
நிதின்கட்காரி வருகை
தமிழகத்தில் நான்கு மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் கட்சி தொண்டர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்த அமித்ஷா, நிதின்கட்காரி உள்ளிட்ட தலைவர்கள் வருகை தர உள்ளனர். தமிழகத்தில் அடிமட்ட அளவில், வாக்குச்சாவடி அளவில் பாஜக வளர்ந்திருப்பதை இது காட்டுகிறது.
வேர் ஊன்றி விட்டோம்
தமிழகத்தில் பாஜக கால் ஊன்றி வேர் ஊன்றி பலமுடன் விளங்குகிறது. பா.ஜ.க. மற்ற கட்சிகளை விட முன்னதாகவே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கஜா புயலின் போது மத்திய அமைச்சர்கள் தலைமையில் நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டது என்றும் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.