புதரில் இருந்து திடீரென வெளியே வந்த யானை.. 2 பேரை விரட்டி துரத்தி கொன்று.. நடுக்காட்டில் பயங்கரம்..!
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு கணக்கெடுப்பு பணியின் போது யானை தாக்கி வன காவலர், தன்னார்வலர் என இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். வனக்காப்பாளர் படுகாயம் அடைந்தார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்ற தொடங்கி டிசம்பர் 22 வரை ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 10 வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 380 பேர் குழுவாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
வனவிலங்கு கணக்கெடுப்பு
இந்நிலையில் நேற்று விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்குப் பகுதியில் வனக்காப்பாளர் பொன் கணேஷ் தலைமையில் வனக்காவலர் சதீஷ்குமார் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவாக வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வன காவலர் கொலை
அப்போது புதர் மறைவில் நின்று இருந்த காட்டு யானை வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை திடீரென துரத்த தொடங்கியது. யானை வனக்காவலர் சதீஷ் குமாரை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு தனது காலால் மிதித்து கொன்றது. அப்போது சதீஷை காப்பாற்ற முயன்ற வனக்காப்பாளர் பொன் கணேஷ் என்பவரை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
தன்னார்வலர் பலி
யானையைக் கண்ட தன்னார்வலர்கள் தப்பியோடி மறைந்தனர். இதில் அவர்களுடன் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த தன்னார்வலர் முத்து பிரபாகர சேரபாண்டியன்(வயது 27) என்பவரையும் யானை மிதித்துக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த விளாமுண்டி வனச்சரகர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.
பிரேத பரிசோதனை
அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம்பட்ட பொன் கணேஷ் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வனக்காவலர் சதீஷ்குமார் (வயது 24) மற்றும் தன்னார்வலர் பிரபாகரன் இருவரின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரும் சோகம்
யானை தாக்கி உயிரிழந்த சதீஷ் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. வனவிலங்கு கணக்கெடுப்பு பணி என்பது யானை தாக்கி வன காவலர் மற்றும் தன்னார்வலர் என இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.