6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா?.. முதல்வர் கேள்வி
ஈரோடு: 6 மாதங்களுக்கு ஒருமுறை லண்டன் செல்கிறாரே அதை ஏன் என ஸ்டாலினால் விளக்க முடியுமா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.மணிமாறனை ஆதரித்து மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் கூறுகையில் மத்தியில் திறமையான பிரதமர் தலைமையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்துக்கு தேவையான திட்டங்களுக்கு நிதி பெற முடியும். ஆனால், திமுக கொள்கையில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.
வேறு கட்சிகள்
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்துள்ளார். ஆனால், இவரது கருத்தை கூட்டணியில் உள்ள வேறு கட்சிகள் ஏற்கவில்லை. தேர்தல் முடிந்த பின்பு பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரமே கூறுகிறார்.
நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் குறைந்த தொகுதியில் போட்டியிடுகிறது.
தலைமை
அவர்களால் எப்படி நிலையான ஆட்சியைத் தர முடியும்? அந்நிய சக்திகளின் தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒழித்துக் காட்டியவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட தலைமை இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.
காவிரி மேலாண்மை
ஸ்டாலினால் பிரதமராக அறிவிக்கப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ராகுல் பேச்சு
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால், 63 டிஎம்டி நீரைத் தேக்கி விடுவார்கள். அப்படி செய்தால், தமிழகம் பாலைவனமாகி விடும். காவிரி விஷயத்தில் நமக்கு கிடைத்த நீதியை தடுத்து அநீதி இழைக்கப் பார்க்கின்றனர். ராகுலின் பேச்சிற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?
கோதாவரி
நமது கூட்டணி வெற்றி பெற்றால் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி, வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு காவிரியில் இருந்து நீர் எடுத்துச் சென்று நிரப்பப்படும். கீழ்பவானி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும்.
தேர்தல்
திமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த வைகோ இன்று அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். அரசியல் கட்சித் தலைவருக்கான தகுதி அவருக்கு இல்லை. பச்சோந்தி போல் அவர் நிறம் மாறியுள்ளார். அவர் கட்சி சின்னத்தில் ஈரோடு வேட்பாளரை போட்டியிடச் செய்யாமல், திமுக சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளார். தேர்தல் விதிமுறையின்படி ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான், அந்த கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடமுடியும்.
லண்டன்
பலரும் உயிர்தியாகம் செய்து உருவான மதிமுகவை, திமுகவிடம் வைகோ அடகு வைத்து விட்டனர்.
தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை. ஆறு மாதம் ஒருமுறை ஸ்டாலின் லண்டன் சென்று வருகிறார். எதற்காக அவர் செல்கிறார் என விளக்கம் சொல்ல முடியுமா?
கொச்சை
விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்திப் பேசுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.