பவானி சாகர் அணை திறக்க ஆணையிட்ட முதல்வர் - ஈரோடு, திருப்பூரில் 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
ஈரோடு மாவட்டம் பாவனி சாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களைச்சேர்ந்த லட்சக்கணக்கான ஏக்கர
ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846,40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் கொள்ளளவு 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதி, அவலாஞ்சி, குந்தா, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் பெய்யும் மழை நீர் பவானி சாகர் அணைக்குத்தான் வரும். இது தவிர கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரும் பவானிசாகர் அணைக்கு வரும்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி சாகர் அணையும் தற்போது 100 அடிவரை நிரம்பியுள்ளது.
அணையால் பலன் பெறும் விளைநிலங்கள்
பவானி சாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதிகளை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஈரோடு, திருப்பூர் குடிநீர் தேவை
ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, பவானி நகராட்சிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவையும் இந்த அணை மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.
102 அடி நீர் தேக்க முடியும்
செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பவானி சாகர் அணையில் 102 அடி தான் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அதற்கு மேல் தேக்கி வைக்கக்கூடாது. அதன் பின்னர் நவம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து அணையில் 105 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்பது அரசின் விதி.
பவானி ஆற்றங்கரையோர மக்கள்
செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது அணையின் பாதுகாப்பு மற்றும் பவானி ஆற்று கரையோர மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறையாக நீர்மட்டம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 100 அடியை தாண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும் என்பதால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
Recommended Video
அணை திறக்க ஆணை
இந்த நிலையில் பவானி சாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். 23,846,40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பவானிசாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.