மும்பை காட்டன் மார்க்கெட்டுக்கு பருத்தி தேவை குறைவு- ஏலத்தில் விவசாயிகள் ஏமாற்றம்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவின்டால் ரூபாய் 3500 க்கு மட்டுமே ஏலம் போனதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பருத்தி பயிரிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே சீசனில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 5500 முதல் 6500 வரை விலை போனது.
இந்த ஆண்டும் வழக்கம்போல் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மும்பை காட்டன் மார்க்கெட்டிற்கு பருத்தி தேவை குறைந்தது.
இதனால் பருத்தியை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. பருத்தி ஏலம் எடுக்கவும் குறைவான வியாபாரிகளே வந்து இருந்தனர்.
இயற்கை விவசாயத்தால், குறைந்த செலவில் அதிக மகசூல்.. கிருஷ்ணகிரி மாவட்ட எலுமிச்சை விவசாயிகள் மகிழ்ச்சி
இன்று நடைபெற்ற ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500 முதல் 4300 வரை மட்டுமே ஏலம் போனது. மொத்தம் 1300 மூட்டை பருத்தி ரூபாய் 20 லட்சத்திற்கு விற்பனையானது.
பருத்தி குறைந்த விலைக்கு விற்பனை ஆனதால் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.