பிஸியான திம்பம் மலைப் பாதையில் ஒரே பனி மூட்டம்.. தமிழகம்-கர்நாடகா வாகன போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் திம்பம் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை முதல் திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனி மூட்டம் நிலவியது. பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர்.
முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதியம், பனிமூட்டம் விலகியதன் பிறகு போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.