ஆளுங்கட்சியினருக்கு குடைச்சல்? காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கடும் கோபத்தில் திமுகவினர்.. இதுதான் காரணமா?
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் மார்க்கெட் ஏல விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா தலையீட்டால் திமுகவினர் கடுப்பில் இருக்கிறார்களாம்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல்வர் உள்ளிட்ட திமுக அரசின் நிலைப்பாடு காங்கிரஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி இணக்கம் இந்தப் பிரச்சனையால் குலையும் நிலையில் இருந்து வரும் நிலையில், ஈரோடு திமுகவினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது வேறொரு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பத்தாண்டுகால வனவாசம்..பாத யாத்திரை.. காங்கிரஸ் குழுவில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா
மார்க்கெட் ஏலம்
ஈரோடு மாநகராட்சி நேதாஜி காய்கறி, பழ மார்க்கெட் குத்தகையை ஈரோட்டைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் ஆதரவோடு ரூ. 2.15 கோடிக்கு லோக்கல் தி.மு.கவினர் ஏலம் எடுத்துள்ளனர். ஆனால், இந்த மார்க்கெட்டில் குத்தகை தொகையை விட பல மடங்கு அதிக வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, இந்த மார்க்கெட்டில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இதை ஏன் வெறும் 2.15 கோடிக்கு குத்தகைக்கு விட வேண்டும்? மாநகராட்சியே வைத்து நடத்தினால் நல்ல வருவாய் ஈட்டலாம் என ஆணையரிடம் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கும் கடிதம்
இந்த விஷயத்தை ஆணையரிடம் தெரிவித்தது மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோருக்கும் கடிதமாக அனுப்பியுள்ளாராம். முதல்வருக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மீது ஆத்திரத்தில் இருக்கிறார்களாம்.
காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை நல்ல உறவைப் பேணி வந்தாலும், தொண்டர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் தங்களுடன் கூட்டணியில் இருப்பதை பலரும் விரும்பவில்லை. காங்கிரஸ் நமக்கு தேவையற்ற சுமை என்றே கூறி வருகின்றனர். காங்கிரஸ் தரப்பிலும், ஆளுங்கட்சி மீது விமர்சனங்கள் கூறக்கூடாது என மறைமுக உத்தரவே போடப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுகவினர் ஏலம் எடுத்த விவகாரத்தில் திருமகன் ஈ.வெ.ரா தலையிட்டுள்ளது லோக்கல் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.