ஜக்கம்மா சொல்லுறா.. ஜக்கம்மா சொல்லுறா.. ஓட்டு போடுங்க.. திமுக நூதன பிரச்சாரம்!
ஈரோடு: கடைசியில் ஜக்கம்மாவிடம் போய் திமுக சரணடைந்து விட்டது போல. ஈரோடு பக்கம் இப்படித்தான் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 ம் தேதி மற்றும் 30 ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் அதிமுக - திமுகவிற்குமிடையேதான் நேரடி போட்டி உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டுவதால், இவ்விரு கட்சிகளும் இத்தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
தீவிரப் பிரச்சாரம்
இதனால் இவ்விரு கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் திமுகவினர் வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிபாளையம் கள்ளிப்பட்டி, சுண்டக்கரடு பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த கஸ்தூரி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு சாந்தி் சத்யப்ரியா ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
கையில் உடுக்கையுடன்
இவர்கள் அப்பகுதியில் வசிக்கும் மலை கிராம மக்களிடம் வாக்கு சேகரிக்க, உடுக்கையுடன் குறி சொல்வதுபோன்று புதுமையான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலத்தை சேர்ந்த திமுகவின் தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவர், குடு குடுப்புக்காரன் போல வேடமனிந்து, வீதி வீதியாக சென்று 'ஜக்கம்மா சொல்லுறா...
ஜக்கம்மா சொல்லுறா
ஜக்கம்மா சொல்லுறா... உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க' நல்லது நடக்கனும்னா உதய சூரியனுக்கு ஓட்டு போடுங்க... மலை வாழ் மக்களை தளபதி ஸ்டாலின் மட்டுமே காப்பாற்றுவார்... ஜக்கம்மா சொல்லுறா... ஜக்கம்மா சொல்லுறா... என தன் கையில் உள்ள உடுக்கையை அடித்தபடி
வீதி வீதியாக சென்று நூதன முறையில் திமுகவிற்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
தெருவில் இறங்கி நடந்தா
திமுக பேச்சாளர் கோவிந்தன் வீதி வீதியாக செல்லும்போது அப்பகுதி மக்கள், தங்களுடைய வீட்டைவிட்டு வெளியே வந்து அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பது மட்டுமின்றி, அவர் சொல்வதையும் கேட்கின்றனர்.
வேடம் போட்டு வாக்கு கேட்டு
சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களில் முதல்கட்ட தலைவர்கள் தொடங்கி, பேச்சாளர்கள் வரை வீதி வீதியாக நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும், தெருமுனை மற்றும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக தேர்தல் பிரச்சாரம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் குடு குடுப்புகாரனைப்போல் வேடமணிந்து வாக்கு கேட்பது 2019 உள்ளாட்சி தேர்தல் டிரெணட் போல.