திமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவும் முக்கியப்புள்ளி... சட்டை செய்யாத ஸ்டாலின்..!
ஈரோடு: திமுக முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளருமான என்.கே.கே.பி. ராஜா அதிமுகவில் இணையும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கட்சியில் எந்தப் பதவியும் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே என்.கே.கே.பி.ராஜாவின் கட்சி தாவல் எண்ணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
கைத்தறித்துறை
கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கைத்தறித்துறை அமைச்சராக பதவியேற்ற என்.கே.கே.பி.ராஜா அடுத்த இரண்டாண்டுகளில் அமைச்சர் பதவியை இழந்ததோடு, காவல்துறையின் கைது நடவடிக்கைக்கும் ஆளாகினார். காரணம் அமைச்சராக இருந்த அவர் நில அபகரிப்பு புகார், ஆள் கடத்தல் புகாரில் சிக்கி ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரிடம் இருந்த அனைத்துப் பதவிகளையும் பறித்த கருணாநிதி சென்னை பக்கம் வரக்கூடாது எனக் கூறும் அளவுக்கு ராஜா மீது கடும் கோபம் கொண்டார்.
ராஜாவின் தந்தை
ராஜாவை கட்சியில் இருந்து ஓரங்கட்டினாலும் அவரது தந்தை என்.கே.கே.பெரியசாமி மீது கருணாநிதிக்கு நல்ல மரியாதை இருந்தது. அவரும் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் என்பதால் மீண்டும் அவரை மாவட்ட அளவில் கட்சி நிர்வாக பணிகளை கவனிக்க வைத்தார் கருணாநிதி. அந்த நேரத்தில் ஜெயலலிதா மீது கொண்ட மன வருத்தம் காரணமாக 2011-ம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் முத்துச்சாமி .
ஸ்டாலின் முக்கியத்துவம்
முத்துசாமியை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பல முக்கியப் பதவிகளை வகித்தவர். இதனால் அவரது வருகையை நல்லவிதமாக கட்சிக்கு பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஸ்டாலின், என்.கே.கே.பி. ராஜாவை முழுவதுமாக ஓரங்கட்டி முத்துச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார். மாவட்டச் செயலாளராகவும் முத்துச்சாமியை கொண்டு வந்தார் ஸ்டாலின்.
தடாலடி நபர்
என்.கே.கே.பி.ராஜாவை ஸ்டாலின் இந்தளவிற்கு ஒதுக்கியதற்கு காரணம் அவர் தடாலடி நபர் என்பது தான். அரசியலுக்கு அடிப்படை பக்குவம். அந்தப் பக்குவம் துளியும் இல்லை எனக் கருதியதால் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டாலினால் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தார் என்.கே.கே.பி.ராஜா. இந்நிலையில் இனியும் திமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்ற எண்ணிய ராஜா அதிமுகவில் இணையும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
அடிக்கல் நாட்டுவிழா
இதற்கு முன்னோட்டமாக கடந்த மாதம் கவுந்தப்பாடி அருகே நடைபெற்ற பள்ளிக்கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோருடன் என்.கே.கே.பி.ராஜாவும் கலந்துகொண்டு அமைச்சர்களுடன் சிரித்துப் பேசும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றால் மீண்டும் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கக்கூடும் என எண்ணியிருக்கிறார். ஆனால் ஸ்டாலினோ என்.கே.கே.பி.ராஜா விவகாரத்தை சட்டை செய்யவில்லை எனத் தெரிகிறது.