ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : ஜெட் வேகத்தில் திமுக.. சட்ட உதவிகளுக்காக “வார் ரூம்”!
இடைத்தேர்தலுக்காக வார் ரூம் அமைத்துள்ளது திமுக சட்டத்துறை.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும் திமுகவினருக்கு உதவும் வகையில் வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் (War Room) ஒன்றை திமுக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே ஆளுங்கட்சியான திமுக களத்தில் இறங்கிய நிலையில், நாளுக்கு நாள் இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு சீட்டை ஒதுக்கிய கையோடு, தேர்தல் பணிக்குழுவை அமைத்து களத்தில் இறங்கியது திமுக.
காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பே திமுக அமைச்சர்கள் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் இறங்கிவிட்டனர்.
சென்னையில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்- மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு
திமுக - காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர்கள்
கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு உழைக்கும் வகையில் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. அதில் 12 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 32 பேர் நியமிக்கப்பட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன் ஆகியோர் இடம்பெற்றனர்.
தேர்தல் பணிக்குழு
மேலும், அந்தியூர் செல்வராஜ், கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என். நல்லசிவம், இல.பத்மநாபன், பா.மு.முபாரக், தே.மதியழகன், கே ஆர்.என்.ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில், பெ.பழனியப்பன், ஒய்.பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி ஆகியோரும் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
வார் ரூம்
இதுகுறித்து திமுக சட்டத் துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகளுக்கும் - கழகத் தோழர்களுக்கும் உதவிடும் வகையில், திமுக சட்டத்துறை சார்பில், சட்டத் துறை இணைச் செயலாளர்கள் இ.பரந்தராமன், எம்.எல்.ஏ (99406-66269) மற்றும் ஈரோடு சு.இராதாகிருஷ்ணன் (98427-55335) மற்றும் வழக்கறிஞர் அர்ஜூன் (95009-92005) ஆகியோர் தலைமையில், கழக வழக்கறிஞர்கள் அடங்கிய வார் ரூம் (War Room) அமைக்கப்படுகிறது.
சட்டப் பிரச்சனைகள்
தேர்தல் பணியாற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தேர்தல் குறித்த சட்டப் பிரச்சனைகள் தொடர்பாக உடனுக்குடன் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ஆளுங்கட்சியான திமுக புயல் வேகத்தில் தேர்தல் பணியாற்றி வருகிறது.