மாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்
ஈரோடு: பிரபல எழுத்தாளராக இருந்தாலும் வியாபாரியிடம் தகராறு செய்திருந்தால், விட்டுவிடக் கூடாது என்று புளித்த மாவு விவகாரத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகளுக்காக பல விருதுகள் பெற்றவர். சில சினிமாக்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, மளிகைக் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்துப்போனதால், திரும்பி தந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடைக்காரர்களால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். அதே நேரம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று திரும்பினார்.
Avadi: ஆனி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி!
தோசை மாவு புளித்துப்போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மளிகைக் கடைக்காரரால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டதற்கு, கலைத்துறையினர், அரசியல் கட்சியினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை பயன்படுத்தி அதிகாரிகள் தவறிழைப்பதாகக் குற்றம்சாட்டினார். கடைக்கு சீல் வைப்பது போன்ற உத்தரவு, அதிகாரிகள் வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் பெறவே உதவும் என்று குற்றம்சாட்டிய விக்கிரமராஜா, கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டால், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் கூறினார்.
குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் பல உணவகங்களில் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளதாத் தெரிவித்த விக்கிரமராஜா, குடிநீர் வாரியத்தின் மூலம், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு குறைந்த கட்டணத்தில் குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறினார். மேலும், ஜெயமோகன் பிரபல எழுத்தாளராக இருந்தாலும் அவர் வணிகரிடம் தகராறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்றும் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.