குடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்
ஈரோடு: மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், காவிரியிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரில் சாயப்பட்டறை கழிவுகள் கலந்து அதன் நிறம் மாறி துர்நாற்றத்துடன் வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வரும் நிலையில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரில் கழிவுக் கலந்து யாருக்கும் உபயோகமில்லாமல் அசுத்த நிராக மாறுவதை கண்டு மக்கள் மனம் வெதும்பியுள்ளனர்.
மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவு நீர், காவிரியில் அக்கரகாரம், வைரபாளையம் ஆகிய இடங்களில் கலக்கிறது.
இதனால் அந்நீர் சுகாதாரமற்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அதன் அருகேயுள்ள குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் நிலத்தடி நீரும் சாயப்பட்டறை கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் ஈரோட்டில் குறிப்பாக காவிரி ஆறு முழுவதுமே மாசடைந்து காணப்படுகிறது. சாயப்பட்டறை கழிவுகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில், காவிரியாற்றில் கலந்து ஓடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு சுற்றுவட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.
இவை வெளியேற்றும் கழிவுகளை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் என பல தரப்பிலும் முறையிட்டாகிவிட்டது. இதனையடுத்து சுற்றியுள்ள சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்து விட்டதாக அரசு தரப்பில் கூறுகின்றனர்.
ஆனால் முழுமையாக நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மாநிலமே வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கவில்லை. இந்தளவிற்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் கூட காவிரி ஆற்றில் குடிப்பதற்கு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
சென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்!
ஆனால் ஈரோட்டிற்கு வந்த பிறகு காவிரியானது, முழுக்க முழுக்க சாக்கடையும் தோல் கழிவுகளும் கலந்து நாசமாகி விடுகிறது கால் நடைகள் கூட குடிக்க இயலாத குடிநீரை தான், ஈரோடு மக்கள் மற்றும் இந்த மாவட்டத்தை தாண்டி காவிரி தண்ணீர் பெறும் மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்
காவிரியில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரும் முழுமையாக கிடைப்பதில்லை. பாதி வழியிலேயே தண்ணீர் திருட்டு நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே கழிவு நீர் கலப்பதிலிருந்து காவிரியை காப்பாற்றி சுத்தமான குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.