ரூ.40 இருந்தா குளிங்க.! இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சுகாதார வளாகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ரூ.3 வசூலிக்க வேண்டிய குளியல் கட்டணம் ரூ.40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை பொய்த்தது, கொளுத்தி எடுத்த கோடை வெயில் காரணமாக தமிழகமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. ஏரிகள், குளங்கள், அணைகள் முக்கிய நீர் நிலைகள் என அனைத்துமே வறண்டு விட்டன.
ஈரோடு மாவட்டத்திலும் குடிநீர் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஈரோட்டில் தற்போது இது 3 நாளைக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை அரசின் கட்டண கழிப்பிடங்களையும் விட்டு வைக்கவில்லை. ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி கட்டண குளிப்பிடத்தில், நபர் ஒருவருக்கு மூன்று ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ரூ.40 கேட்பதால் வெளியூர் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த வெளியூர் பயணிகள், ஈரோடு மாநகராட்சியின் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றோம்.
குடிகாரனால் உயிரிழந்த மனைவி.. விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்த ரமேஷ்.. மூடப்பட்டது மதுக்கடை
வழக்கமாக ரூ.3 கேட்பார்கள், மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பது எங்களுக்கும் தெரியும். வழக்கமாக வாங்குவதை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கலாம்.
ஆனால் குளிக்க போன இடத்தில் ரூ.40 தந்தால் தான் குளிப்பதற்கு அனுமதிக்க முடியும் என கறாராக கூறியதாக தெரிவித்தனர். குளிப்பதற்கு அதுவும் மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் இவ்வளவு கட்டணமா என தாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டனர்.
இது குறித்து கட்டணம் வசூலிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, தண்ணீர் தாங்கள் வெளியிலிருந்து வாங்குவதாகவும், இஷ்டமிருந்தால் இங்கு ரூ.40 கொடுத்து விட்டு குளித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் வாக்குவாதம் செய்யாமல் இடத்தை காலி செய்யுங்கள் என விரட்டியதாக வருத்தம் தெரிவித்தனர்.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள ஒப்பந்ததாரர் தரப்பு, மிக அதிக பணத்தை செலவு செய்து தண்ணீர் வாங்கி வைப்பதால் வேறு வழியின்றி குளியல் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக கூறியுள்ளது . ஆனால் இது குறித்து உரிய தகவல் ஏதும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.