தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
பாஜக கூட்டணியில் முற்போக்கு என்ற வார்த்தை இல்லை. அப்போது இது புது கூட்டணியா? என்று கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய பணிமனையை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்ற எடப்பாடியின் உறுதித்தன்மையை இது காட்டுகிறது.
பாஜக மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்னும் வேட்பாளரை அறிவிப்பதை பற்றி முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி வேட்பாளரை அறிவித்து, தேர்தல் பணிகளை செய்வதற்காக தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற புதிய பணிமனையை எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு.. ஓபிஎஸ் யாரை அறிவிப்பார்?
ஈரோடு பாஜக ஆதரவு
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் இன்னும் பாஜக நிலைப்பாட்டை எடுக்கவில்லை. வேட்பாளரை நிறுத்துவதா? ஓ பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா? எடப்பாடியை ஆதரிப்பதா என்று பாஜக முடிவு செய்யவில்லை. அல்லது தேர்தலை மொத்தமாக புறக்கணிப்பதா என்றும் பாஜக முடிவு செய்யவில்லை. பாஜக முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறிய நிலையில், அதே பாஜகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்து உள்ளார். பாஜகவின் நிலைப்பாட்டை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்லும் வகையில் அவரின் செயல்பாடு உள்ளது.
கூட்டணி
இந்த நிலையில்தான் கே. எஸ். தென்னரசுக்கு என்று இன்று தேர்தல் பணிமனை தொடங்கப்பட்டது. கே. எஸ். தென்னரசுக்காக தேர்தல் பணிகளை செய்வதற்காக இந்த பணிமனை தொடங்கப்பட்டது. முதலில் அதிமுக பணிமனை என்று இது செயல்பட்டு வந்தது. வேட்பாளரை அறிவிக்கும் முன் அதிமுக பணிமனை என்ற பெயரில் இந்த பணிமனை இயங்கி வந்தது. கே. எஸ். தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு இந்த பணிமனை பெயர் மாற்றப்பட்டது. தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் இந்த பணிமனை திறக்கப்பட்டு உள்ளது.
கேள்வி
இதனால் எங்கே எடப்பாடி தரப்பிற்கு பாஜக ஆதரவு உறுதி ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அங்குதான் எடப்பாடி தரப்பு ட்விஸ்ட் வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிதான் பாஜக கூட்டணி. அதாவது என்டிஏ. ஆனால் இப்போது வைக்கப்பட்டு இருக்கும் கூட்டணிக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்துள்ளார். அதாவது காங்கிரசின் யூ.பி.ஏவில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள முற்போக்கை எடப்பாடி தனது கையில் எடுத்து உள்ளார். எடப்பாடியின் இந்த நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி பெயர் குழப்பம்
இந்த பணிமனை பெயர் காரணமாக பின்வரும் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன.
1. பணிமனை பெயர் எழுத்து பிழையா?
2. பாஜக கூட்டணியில் முற்போக்கு என்ற வார்த்தை இல்லை. அப்போது இது புது கூட்டணியா?
3. பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு பதிலாக முற்போக்கு கூட்டணி ஒன்றை எடப்பாடி அறிவித்துள்ளாரா அல்லது என்டிஏ கூட்டணிக்கு மாற்றாக பாஜகவை உள்ளடக்கிய, தமிழ்நாடு அளவில் அதிமுக தலைமையில் வேறு கொள்கை கொண்ட கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளதா?
4. பாஜக இதற்கு எப்படி பதில் அளிக்கும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.