மீண்டும் வண்டியை ஈரோட்டுக்கு விட்ட ஈபிஎஸ்.. உங்க பூத்ல நிலவரம் என்ன? பொறுப்பாளர்களுடன் மீட்டிங்!
ஈரோட்டில் இன்று மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு : ஈரோட்டில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவிப்பது பற்றி ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி பூத் கமிட்டி வாரியாக ஆய்வு செய்வதாகவும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு அணிகளும் களமிறங்குவதாக அறிவித்துள்ளன. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி, அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
கடந்த சில நாட்களாக ஈரோட்டிலும், சேலத்திலும், அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஈபிஎஸ், அந்த வகையில், இன்று மீண்டும் ஈரோட்டுக்கு வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
திண்டுக்கல் சீனிவாசனை மட்டும் தனியாக சந்தித்த எடப்பாடி.. 30 நிமிடங்கள்.. என்ன நடந்தது? ரகசியமாம்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்க இருக்கும் சூழலில் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு, வலுவான ஒரு வேட்பாளரை முடிவு செய்து வைத்திருப்பதாகவும், எந்த நேரத்திலும் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஈரோடு - சேலம் என்றே மாறி மாறி பயணித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் பொறுப்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். மேலும் தேர்தல் பணியாற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார். அதோடு இல்லாமல் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆய்வு செய்யும் எடப்பாடி
தேர்தல் பணிக்குழு மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். வீடு, வீடாக சென்று வாக்காளர் சரிபார்க்கும் பணியை 3 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்தனர். இன்றுடன் வாக்காளர் சரி பார்ப்பு பணி நிறைவு பெறுகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோட்டுக்கு வந்துள்ளார்.
பூத் வாரியாக - அதிமுகவுக்கு எத்தனை?
ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அவர் பூத் வாரியாக ஆய்வு செய்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு பூத்திலும் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த தேர்தலில் அங்கு அதிமுகவுக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தது? புதிதாக எத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்? அந்த பூத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக கேட்டறிகிறார். இதே போல் 238 பூத் கமிட்டியினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
முக்கிய ஆலோசனை
மேலும், எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் கட்சியின் தேர்தல் பணிக்குழு, தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறிவிப்பது பற்றி ஆலோசனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் ஈபிஎஸ் ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறது.