அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க? "லகலக" எடப்பாடி.. ஈரோட்டில் திக்கு முக்காடும் ஓபிஎஸ்.. என்னாச்சு?
இந்த தேர்தலுக்காக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் ஓ பன்னீர்செல்வம் அணியில் வேலை பார்க்கும் பல்வேறு நிர்வாகிகளை கொக்கி போட்டு தூக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு இருக்கிறதாம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அடித்து ஆட தொடங்கி உள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம் முடங்குகிறதோ இல்லையோ நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும், தேர்தலில் கண்டிப்பாக நமது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறாராம்.. சின்னம் முடங்கினால் அதற்கான பிளான் பியும் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றே எடப்பாடி தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு டெபாசிட் கிடைக்காது.. பின்வாங்குறது ஏன்னு புரியுதா: அமைச்சர் மனோ தங்கராஜ்
எடப்பாடி அதிரடி
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று முக்கிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை கொடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது. எங்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அடித்து ஆட தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது.
பணிக்குழு
முக்கியமாக இங்கே முடிவுகளை தீர்மானிக்கும் 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்று செங்கோட்டையன் பேசி இருக்கிறாராம். இந்த தேர்தலுக்காக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்துள்ளது. ஈரோடு கிழக்கில் இந்த பணிக்குழு தற்போது தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. வேட்பாளரை அறிவிக்கும் முன் வார்டு வார்டாக பணிகளை செய்வது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருகிறது. எடப்பாடி தரப்பின் இந்த வேகத்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் திக்குமுக்காடி போய் உள்ளது.
ஆட்களை தூக்க பிளான்
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம் ஆட்களையும் தூக்க எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம். ஈரோடு கிழக்கில் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் நிர்வாகிகள் பலர் டீமில் இருந்தவர்கள். இவர்களைத்தான் எடப்பாடி தட்டி தூக்க முடிவு செய்து இருக்கிறாராம். ஓ பன்னீர்செல்வத்திற்கு சின்னம் கிடைக்காது. இந்த இடைத்தேர்தலில் அவர் தரப்பு போட்டியிட்டால், படுதோல்வியைத்தான் சந்திக்கும். அவருக்கு போதிய ஆதரவும் இல்லை. அவர் பாஜகவின் பி டீம் போல செயல்படுகிறார். என்னுடைய அணிக்கு இப்போதே வந்துவிடுங்கள் என்று எடப்பாடி தரப்பு நூல் விட்டு வருகிறதாம்.
ஓ பன்னீர்செல்வம் அப்செட்
ஓ பன்னீர்செல்வத்தின் சமீபத்திய செயல்பாடுகளால் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலரேகூட அப்செட் ஆகி உள்ளனராம். அவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்று அப்செட்டில் இருக்கிறார்களாம். இதனால் இவர்களை அப்படியே தங்கள் பக்கம் இழுத்திவிடலாம் என்று எடப்பாடி தரப்பும் முடிவு செய்து உள்ளதாம். இதனால் அவர்களுடன் எடப்பாடி தரப்பின் முக்கிய நிர்வாகி ஒருவரும் பேசி வருகிறாராம். இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் பணிக்குழுவை ஓபிஎஸ் தரப்பு நியமனம் செய்துள்ளாராம், நேற்று 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை ஓ பன்னீர்செல்வம் குழு நியமனம் செய்தது.
குழப்பம்
இங்கே பாஜக போட்டியிடுவதாக இருந்தால் அவர்களுக்காக இந்த தேர்தல் பணிக்குழு வேலைகளை செய்யும். பாஜக போட்டியிடவில்லை என்றால் அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம் கண்டிப்பாக வேட்பாளரை களமிறக்குவார், என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். 118 பேர் கொண்ட பணிக்குழுவில் ஈரோட்டுக்காரர்கள் குறைவாகவே உள்ளனர். ஈரோட்டில் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரிதாக நிர்வாகிகள் இல்லை. அதேபோல் ஈரோட்டு ஆட்களை எடுத்தால் அவர்கள் எடப்பாடி பக்கம் சென்றுவிடுவார்கள் என்பதால் பெரும்பாலும் தென்மாவட்டக்காரர்களை ஓ பன்னீர்செல்வம் இந்த குழுவில் நியமித்து இருக்கிறாராம்.