12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது பவானிசாகர் அணை.. முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி தரும் அணை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு, முழு கொள்ளளவான 105 அடியை எட்டி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது பவானிசாகர் அணை. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 1956ம் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். பவானி சாகர் அணையின் கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரிய பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணை ஆகும்.
2லட்சம் ஏக்கர் நிலம்
இந்த அணை தான் ஈரோடு மாவட்ட மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரம் ஆகும். பவானிசாகர் அணையின் மூலம் சுமார் 2லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீர்வரத்து அதிகரிப்பு
அண்மைக்காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வந்த கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் மற்றும் வடகேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தது.
நிறைந்தது அணை
இதையடுத்து தற்போது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு, முழு கொள்ளளவான 105 அடியை எட்டி ரம்மியாக காட்சி அளிக்கிறது. இந்த அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரம்மியமான அணை
அணையின் மேல் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறிவரும் ரம்மியமான காட்சியை மக்கள் பார்த்து ரசிப்பதற்காக குவிந்து வருகிறார்கள். இதனால் பவானிசாகர் அணைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.