கமலா ஹாரீஸுக்கு அடுத்து செலின் கவுண்டர்.. தமிழகத்திற்கு பெருமை தேடிதந்த தங்கம்.. ஈரோடு மக்கள் ஹேப்பி
ஈரோடு: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ள கொரோனா ஆலோசனைக் குழுவில் ஈரோட்டைச் சேர்ந்த பெண் டாக்டர் இடம்பெற்றுள்ளார். இதனால் அவரது கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். டிரம்ப் மீதான குற்றச்சாட்டே கொரோனாவை டிரம்ப் சரியாக கையாள வில்லை என்பதுதான். இதனால் ஜோ பிடன் தான் வெற்றி பெற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவை நியமித்தார்.
டாக்டர் செலின்
இந்த குழுவில் இந்திய டாக்டர் செலின் கவுண்டர் என்கிற செலின் ராணி கவுண்டர் இடம்பிடித்துள்ளார். 43 வயதாகும் செலின் அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
அமெரிக்கா
இந்த செலின் இந்தியாவுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை. இவர் சார்ந்த தமிழகத்திற்கு பெருமையை கொடுத்துள்ளார். இவரது தந்தை நடராஜன், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். தங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் அமெரிக்காவில் உயர் பதவிக்கு தேர்வு செய்தது கிராமத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் செலின்
தூரபாளையம் கிராமத்தில் வசித்து வரும் டாக்டர் செலினின் பெரியப்பா மகள் அன்னபூரணி, கிராம மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினார். இதுவரை செலின் 4 முறை மொடக்குறிச்சிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்கா
அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரீஸும் தமிழகத்தில் மன்னார்குடி அருகே சிறிய கிராமத்தை சேர்ந்தவர்தான். இவர் அமெரிக்கா சென்று இன்று உயர் பதவியை வகித்து வருவது தமிழர்களுக்கு பெருமிதமான விஷயமாகும். அது போல் செலினுக்கு கிடைத்த அங்கீகாரமும் பெருமைக்குரியதே.