ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுகவில் வாய்ப்பு அவருக்குத்தானா..லிஸ்ட்ல பேரு இல்லை..கவனிச்சீங்களா?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்றும் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி வரும் 27-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்தக் கட்சிக்கே மீண்டும் கொடுக்கப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தல்.. வேட்பாளர் அறிவிப்பு எப்போது? குலதெய்வ வழிபாட்டுக்கு பின் ஓபிஎஸ் சொன்ன பதில்!
யார் யார் போட்டி?
காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேதிமுக தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பெண் வேட்பாளரை நிறுத்தப்போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தங்கள் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக தெரிவித்தார். நானே கூட போட்டியிடலாம் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார்.
இரட்டை இலை முடக்கப்படுமா?
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவே போட்டியிடும் என சூசகமாக தமிழக பாஜக கூறிவிட்டது. இதனால், அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்து தாமதம் ஆவதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் விமர்சனம் செய்து வருகின்றன.
தனியார் ஓட்டலில் ஆலோசனை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், கே.எ.ஸ் தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் பலரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.
நாளையும் நிர்வாகிகள் கூட்டம்
சுமார் 7 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளையும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவில் கேவி ராமலிங்கம் பெயர் இடம் பெற்றுள்ளது.
கே.எஸ்.தென்னரசுக்கு வாய்ப்பு?
இதனால், அவர் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு மீண்டும் போட்டியிடலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியின் போது கே.எ.ஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தார். இதை ஊர்ஜிதம் செய்யும் வகையின் செங்கோட்டையன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவில் கே.எஸ் தென்னரசு பெயர் இடம் பெறவில்லை.