தூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்!
Recommended Video
ஈரோடு: "அமைதியா எதிர்ப்பு தெரிவிக்க வந்தோம்.. அதுக்கு எங்களை இப்படியா குண்டுக்கட்டா தூக்கி வேனுக்குள் போடறது?" என்று விவசாயிகள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.
உயர்மின் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் வழியாக ஆயிரம் அடி உயரம் உடைய மின் கோபுரம் அமைத்து சட்டீஸ் மாநிலம் வரை வேதாந்தா நிறுவனம் கொண்டு செல்கிறது.
இதற்கு ஏற்கனவே கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியதால் புதை வடம் வழியாக எடுத்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் விவசாயிகளின் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து போலீசார் பாதுகாப்புடன் நிறுவி வருகின்றனர்.
இதற்கு விவசாயிகள் பலவகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு கட்ட போராட்டங்களும் நடந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தபோவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தார்கள்.
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் ஆபீஸ் நோக்கி இன்று நடந்து வந்தனர். அப்போது சம்பத் நகரில் வந்தவர்களை போலீசார் வழி மறித்து தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்தது.
பின்னர், விவசாயிகள் தரையில் படுத்து உருண்டு தர்ணாவில் ஈடுபட்டனர். விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர். "மின்கோபுரங்கள் அமைப்பதை தடுத்து நிறுத்தும்வரை எங்கள் போராட்டம் என்றும் இப்படி குண்டுகட்டாக வேனில் ஏற்றிய காவல்துறைக்கு எங்கள் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்" என்று விவசாயிகள் வேனில் இருந்தபடியே தெரிவித்தனர்.