சொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு!
ஈரோடு எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஈரோடு: "சொன்னா கேட்க மாட்ட.. போனை குடு மொதல்ல.."என்று செய்தியாளர்களின் செல்போனை பிடுங்கி கீழே தள்ளிவிட்டு தாக்கிய ஈரோடு எம்எல்ஏவின் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசுப் பள்ளியில், இரு தினங்களுக்கு முன்பு தமிழக அதிமுக முன்னாள் அமைச்சரும் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கேவி ராமலிங்கம், ஈரோடு கிழக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர்.
அப்போது முன்னாள் மாணவர்கள், லேப்டாப் வழங்காததைக் கண்டித்து எம்எல்ஏக்களை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.மாணவர்களை எம்எல்ஏக்கள் சமாதானப்படுத்தியும் முடியவில்லை. அவர்களை வெளியேவும் செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் எம்எல்ஏக்கள் ரெண்டு பேரும் கிளாஸ் ரூமில் போய் உட்கார்ந்து கொண்டனர்.
அங்கேயும் மாணவர்கள் போய் முற்றுகையிட்டு விட்டனர். 'ஓசியில் கொடுக்கிற லேப்டாப்புக்கு இவ்ளோ பிரச்னை பண்றீங்களே" என்று எம்எல்ஏ தென்னரசு மாணவர்களை மிரட்டி இருக்கிறார். மறியல் செய்த மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இவை அனைத்தையும் அங்கிருந்த செய்தியாளர்கள் படம் பிடித்தனர். ஆனால் செல்போனில், கேமராவில் எதையும் வீடியோ எடுக்கக்கூடாது என்று எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி செய்தியாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
"யோவ்... வீடியோ எடுக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா?"என்று செய்தியாளர்களின் சட்டையை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். அத்துடன் காலால் எட்டி உதைத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். உங்க முன்னாடியே இப்படி நடக்குதே என்று செய்தியாளர்கள் சொல்லியும் எம்எல்ஏக்கள் அமைதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
எம்எல்ஏ மகன் தாக்கியதில், இந்து தமிழ் நாளிதழ் செய்தியாளர் கோவிந்தராஜ் மற்றும் ஜூனியர் விகடன் செய்தியாளர் நவீன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பத்திரிகையாளர்கள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எம்எல்ஏ மகனால் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.