துக்ளக் விழாவில் ரஜினி அப்படி பேசியிருக்கக் கூடாது... கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு
ஈரோடு: துக்ளக் ஆண்டு விழாவில் முரசொலி குறித்தும், பெரியார் பற்றியும் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கக் கூடாது என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரச்சனைகளுக்கு உரிய கருத்துக்களை மட்டும் ரஜினி தேடி தேடி பேசி வருவதாக அவர் சாடியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
தலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்!
வலுக்கும் எதிர்ப்பு
துக்ளக் இதழ் ஆண்டுவிழாவில் முரசொலி படித்தால் அவர் திமுககாரர் என்றும், துக்ளக் படித்தால் அவர் அறிவாளி எனவும் ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பெரியார் குறித்த கருத்தும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ரஜினிக்கு ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்த நிலையில், கி.வீரமணி, கொளத்தூர் மணி, போன்றவர்கள் ரஜினிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளனர்.
ஈஸ்வரன் எதிர்ப்பு
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரனும் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முரசொலி பற்றி துக்ளக் விழாவில் ரஜினி பேசியிருக்கக் கூடாது என்றும், பிரச்சனைக்குரிய கருத்தை தேடிச்சென்று பேசுவதையே ரஜினி வழக்கமாக கொண்டுள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.
விமர்சனம்
அரசியல் விளம்பரத்துக்காக ரஜினி இதுபோன்ற கருத்துக்களை அண்மைக்காலமாக பேசி வருவதாகவும், பெரியாரை பற்றி பேசியதை தவிர்த்திருக்கலாம் எனவும், கூறினார். மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.
நீர் மேலாண்மை
தமிழக அரசு நீர் மேலாண்மை விருதை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த ஈஸ்வரன், இது போன்ற விருதுகள் தான் தண்ணீர் சேமிப்பு பற்றி பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனக் கூறினார்.