எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்
ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சியை கொடுத்து வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் அண்மைக்காலமாக ஒதுங்கி இருந்தார் இளங்கோவன். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசிய போதும் பெரியாரின் பேரனான ஈவிகேஎஸ் இளங்கோவன் அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில் ஈரோட்டில் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சியை கொடுப்பது போல் தோன்றுகிறது. ஆனால் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாமல் தமிழக மக்களுக்கு அவர் துரோகம் செய்து வருகிறார்.
சிஏஏ போன்ற விவகாரங்களில் மத்திய பாஜக அரசை அதிமுக ஆதரிக்கிறது. பாஜகவின் பி டீம் ஆக அதிமுக செயல்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு கொஞ்சம் நல்ல பெயர் இருக்கிறது. அந்த பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்தி விடுவார் என்றார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்றார். தற்போது தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் தமிழக அரசை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.