ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாள் குறித்த காங்கிரஸ்.. பிப்.3ல் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்?
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதாக தகவல்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேட்புமனுத் தாக்கலின் போது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்காக திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இதற்காக 11 அமைச்சர்கள் கொண்டு பெரும்படை திமுக தரப்பில் களமிறக்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தீவிர ஆலோசனை! எடப்பாடி தரப்புக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளர் யார்?
ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். அதுமட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடமும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்பாளர்கள் அறிமுகம்
அதேபோல் தேமுதிக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதோடு, வேட்பாளர்களையும் அறிமுகம் செய்துள்ளனர். தேமுதிக சார்பாக அக்கட்சி ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனந்த் மற்றும் அமமுக சார்பாக இளம் வேட்பாளரான சிவபிரசாந்த் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிப்.3ல் வேட்புமனு
இதனிடையே வரும் 31ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரும் பிப்ரவரி 3ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக நிலை
இந்த வேட்புமனுத் தாக்கலின் போது காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனுத் தாக்கல் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், நாளை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகம் செய்யப்பட உள்ளார். ஆனால் அதிமுக வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு தரப்பும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.