மாயாற்றில்.. மரக்கட்டையில் மிதந்து வந்த நீலியம்மாள் சடலம்.. வைரலாகும் சோக காட்சி
மாயாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதியில் உள்ளனர்
Recommended Video
ஈரோடு: வெள்ளப்பெருக்கடுத்து ஓடும் மாயாற்றில், நீலியம்மாளின் சடலத்தை மரக்கட்டையில் கட்டி, உறவினர்கள் நீந்தி கொண்டு போன காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ளதுதான் தெங்குமரஹாடா என்ற வனக்கிராமம். இங்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் சொல்லி கொள்வது மாதிரி கிடையாது. நகரத்துக்கு போக வேண்டுமானால்கூட 25 கிலோ மீட்டர் தூர மண்சாலையில் தான் போக வேண்டும். இல்லையானால் மாயாற்றில் பரிசல்மூலம் செல்ல வேண்டும்.
ஆனால் இப்போது பலத்த மழை பெய்வதால் மாயாற்றில் வெள்ளம் பொங்கி வருகிறது. அதனால் பரிசல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள அள்ளிமாயார் என்ற கிராமத்தை சேர்ந்த நீலியம்மாள் என்ற பழங்குடியின பெண், சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் நேற்று இறந்துவிட்டார். இவரை அவரது கிராமத்துக்கு கொண்டு செல்வது எப்படி என்று தெரியாமல் உறவினர்களும், கிராம மக்களும் திகைத்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் கல்லம்பாளையம் வரை கொண்டு வந்துவிட்டனர். ஆனால் ஆற்றை கடப்பது எப்படி என்றுதான் தெரியவில்லை. அதனால் சடலத்தை மரக்கட்டைகளில் நான்கு புறமும் கட்டி, மாயாற்றில் இறங்கி நீந்த தொடங்கினர்.
வெள்ளம் ஒரு பக்கம் கரை புரண்டு ஓடும் நிலையில், ஆபத்தான முறையில் சடலத்தை இவர்கள் மரக்கட்டைகளில் தூக்கியும், நீந்தியும் வந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்களுக்கு ஒரு பாலம் வேண்டும் என்று ரொம்ப காலமாகவே இந்த மக்கள் கேட்டு கொண்டு வருகின்றனர். அதில் இறந்துபோன நீலியம்மாளும் ஒருவர்!