அண்ணா நகர்.. எம்.ஜி.ஆர். நகர்.. வரிசையில்... எடப்பாடியார் நகர்... பெருந்துறையில் பெயர் சூட்டல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிய நகர் ஒன்று உதயமாகியுள்ளது.
அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர், வரிசையில் எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டி இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம்.
இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் உள்ளூர் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதில் கலந்துகொண்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்
தலைவர்கள் பெயர்
தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் தலைவர்களின் பெயர்களில் ஏராளமான தெருக்களும், சாலைகளும், மேம்பாலங்களும் உள்ளன. அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர், கலைஞர் கருணாநிதி நகர் (கே.கே.நகர்), ஜெயலலிதா நகர், என சென்னை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட பல ஊர்களிலும் அரசியல் தலைவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களது பெயர்களில் இடங்கள் உள்ளன. சென்னையில் கூட ஒரு பாலத்திற்கு மூப்பனார் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம்
அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தமிழகத்தில் முதல்முறையாக ஒரு நகர் உதயமாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஆர்.எஸ். சாலை பகுதிக்கு எடப்பாடியார் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. எடப்பாடியார் நகர் தொடக்க விழாவில் அப் பகுதி மக்கள் மற்றும் அதிமுகவினர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாட்டை பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் செய்திருந்தார்.
தோப்பு வெங்கடாச்சலம்
முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிதாக ஒரு நகர் உதயமானதற்கு முழு காரணம் தோப்பு வெங்கடாச்சலம் தான். இதற்காக அவருக்கு இ.பி.எஸ். தரப்பினர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தோப்பு வெங்கடாச்சலத்தை தொடங்கி வைத்ததை பின்பற்றி எடப்பாடி பழனிசாமி பெயரை புதிதாக உருவாகும் இடங்களுக்கு சூட்டுவதற்கு அதிமுகவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கவனம் ஈர்ப்பு
அதிமுகவில் இதுவரை யாருக்கும் தோன்றாத ஒன்றை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் தோப்பு வெங்கடாச்சலம். இதனிடையே சேலத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு அலுவலக கட்டிடம் ஒன்றுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சூட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.