தமிழகத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. கோபியில் வீடுகளுக்குள் வெள்ளம்
Recommended Video
ஈரோடு: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. இதில் கோபியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
வடகிழக்கு பருவமழை தாமதமாக இன்று தொடங்குகிறது. முதலில் கடலோர மாவட்டங்களில் தொடங்கி படிப்படியாக மற்ற மாவட்டங்களில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, செம்போடை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும் ஈரோடு மாவட்டம் கோபியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள இந்திரா நகர் குளம் நிரம்பி வெள்ளீர் ஊருக்குள் புகுந்தது. முத்துசா வீதி, மார்க்கெட் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள வீடுகளிலும் கடைகளிலும் வெள்ளம் புகுந்தது.
இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்றுதான் பருவமழை தொடங்கியது. இதற்கே இந்த வெள்ளம் என்றால் இன்னும் போக போக எப்படி என கவலைக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் மழை, வெள்ளத்தால் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
மதுரையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதிய வேளையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், கோரிபாளையம், சிம்மக்கல் , திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நகரத்தின் மையப் பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 5 நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்த மக்கள் கனமழையைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூரை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும். இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, வெப்பநிலை குறையும் ( 24°- 28°). கடல் சீற்றம் சற்று குறைந்து காணப்படும். கடலூர் மீனவர்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் புயல் எச்சரிக்கை கொடி எதுவும் ஏற்றப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் சாரல் மழை துவங்கியது.கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி என மாவட்டத்தில் பல பகுதியில் லேசான மழை பெய்து வருகின்றது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மீனவர்களுக்கு பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.