உயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.? அமைச்சருக்கு விவசாயிகள் சவால்
ஈரோடு: உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக நேரடி விவாதத்திற்கு வர தயாரா என, மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு விவசாயிகள் சவால் விடுத்துள்ளனர்.
உயர் மின்னழுத்த கோபுரம் தொடர்பாக மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டமன்றத்தில் முற்றிலும் தவறான தகவல்களை தொடர்ந்து கூறி வருவதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, புதைவட கம்பிகள் மூலமாக 800 மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவருவது சாத்தியமில்லை. எனவே தான் உயர் மின்கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகளை பாதிக்கும் வகையில் உயர் மின்கோபுரங்களை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
அதே போல உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று உடலில் லைட் எரிவதாக கூறி அரசியல் செய்ய வேண்டாம். தமிழகத்தின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, உயர்மின் கோபுர திட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.
ஆனால் 800 மெகாவாட் மின்வழித்தடத்தை புதைவழி கம்பிகளாக கொண்டு செல்ல முடியாது என அமைச்சர்கள் கூறியுள்ளதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,1,100 மெகாவாட் மின்வழித்தடத்தை, பூமிக்கு அடியில் கேபிளாக கொண்டு செல்ல முடியும் என மத்திய அரசு கூறியிருப்பதை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள் 1,100 மெகாவாட் போர்பந்தரிலிருந்தும், கொச்சினிலிருந்தும் தென்னாப்பிரிக்காவிலுள்ள ஒரு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் அறிவிக்கப்படும் போது, தமிழகத்தில் 800 மெகாவாட் திட்டம் சாத்தியமில்லை என கூறுவதை ஏற்க முடியாது.
அப்படி அமைச்சர் கூறுவது உண்மையென்றால் மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம் தவறா, அல்லது மத்திய அரசு அறிவித்த திட்டம் சாத்தியம் என்றால் தமிழக அமைச்சர் கூறுவது தவறா என்பதை தெளிவுபடுத்துமாறு விவசாயிகள் கூறியுள்ளனர்.
நீங்கள் விளைநிலங்களில் அமைக்க முயற்சிக்கும் உயர் மின் கோபுரங்களுக்கு அடியில் வீடு கட்டி குடியிருக்க நீங்கள் தயாரா என கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள், இது தொடர்பாக பொது விவாதத்திற்கு வர அமைச்சர் தயாரா என சவால் விடுத்துள்ளனர்.
இதே போல மின்காந்த அலை கசிவால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதற்கும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதில் மின் வழித்தடத்தை பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.