மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்
ஈரோடு: அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பதுபோல், மக்களுக்கும் விசுவாசமாக இருக்கிறேன் என்று அதிமுக ஜெ. பேரவை இணைச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அடிப்படை தொண்டனாக இருப்பேன்,பொறுப்பில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், முதல்வர், துணை முதல்வர் தகுந்த மரியாதை தருகின்றனர்.
சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன் என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், நான் வேறு இயக்கத்திற்கு செல்வதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது என்று கூறிய அவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை முதல்வரிடம் கொடுத்து விட்டேன், இது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் சூசகமாக கூறியிருந்தார். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை வெளியாக உள்ள நிலையில், அதிமுகவுக்கு நெருக்கடி முற்றிவருவதாக கூறப்படுகிறது.