விவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி
ஈரோடு : ஆளுநர் பதவியை விட விவசாயம் பார்க்கத்தான் தான் ஆர்வமாய் இருந்ததாக கேரளா ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநில ஆளுநருமான சதாசிவம் ஈரோட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் தனது மலரும் நினைவுகள் குறித்தும், மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் சொந்த ஊரான ஈரோட்டில் பேசியுள்ளார்.
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் சதாசிவம் பேசியதாவது:
சாதாரண குடும்பதை சேர்ந்தவன்
"நான் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஈரோடு மாவட்டம் சிங்கம் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்தேன். கல்லூரி படிப்பை ஈரோடு சி.எம்.சி. கல்லூரியில் படித்தேன். சட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் முடித்தேன்.
மகிழ்ச்சி அளித்த வாழ்த்து
நாம் எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும். நாம் வந்த வழியை திரும்பி பார்க்க வேண்டும். நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முதல்நாளில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருந்தது
பெண்களுக்கு அறிவுரை
உங்களில் யார் வேண்டுமானாலும் முயற்சி செய்தால் கண்டிப்பாக பெரிய பதவிக்கு வர முடியும். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே பெண்கள், தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வெளியில் சொல்லும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆளுநர் சதாசிவம் விருப்பம்
நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். அது பற்றி அறிவித்தும் இருந்தேன்.
முதலில் தயங்கினேன்
அப்போது கேரள ஆளுநர் பதவி எனக்கு வந்தது. முதலில் கவர்னர் பதவியை ஏற்க தயங்கினேன். பின்னர் என் நலம் விரும்பிகள் உங்களை போல் பலர் ஓய்வு பெற்ற பிறகு ஆளுநர் ஆகி உள்ளனர். நீங்களும் பதவி ஏற்கலாம் என தெரிவித்தனர். அதன்படி கேரள ஆளுநராக மாறினேன்" இவ்வாறு கூறினார்.