"தனித்து நிற்போம்".. கட்டம் கட்டும் எடப்பாடி டீம்.. பாஜகவை கழற்றிவிட பிளான்? என்ன நடக்குது கேம்பில்?
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவை கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக துணிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தொடக்கத்தில் இருந்தே தீவிரம் காட்டி வருகிறது. ஓ பன்னீர்செல்வம், பாஜக எல்லோரும் என்ன செய்கிறார்களோ.. அதை பற்றி கவலையில்லை.. நாம் போட்டியிடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இதற்காக தேர்தல் கமிட்டி குழுவையும் அமைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வேகம் காட்டி வருகிறது. இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி முக்கியமான தேர்தலாக கருதுகிறது என்பதற்கு இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தீவிர ஆலோசனை! எடப்பாடி தரப்புக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளர் யார்?
முதல் உதாரணம்
111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த தேர்தலுக்காக நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜி அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது. எல்லா மாஜி அமைச்சர்களும் கிட்டத்தட்ட களமிறக்கப்படும் அளவிற்கு இந்த தேர்தலை எடப்பாடி தரப்பு சீரியஸாக பார்க்கிறது.
இரண்டாவது உதாரணம்
இரண்டாவதாக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் கிடைக்காத பட்சத்தில், சின்னம் முடங்கினால் புல்லட் சின்னம் கேட்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு விஷயங்களுமே இந்த தேர்தலில் எடப்பாடி டீம் எவ்வளவு சீரியஸாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவை கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக துணிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக
நேற்று பேட்டி அளித்த ஈரோடு அதிமுக தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். இந்த தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும். அதிமுக தனித்தே களத்தில் நிற்கிறது. கூட்டணியில் அமைய உள்ள கட்சிகள் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களிலும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க உள்ளார்.பாஜக இதில் வருமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று செங்கோட்டையன் கூறி உள்ளார். இந்த தேர்தலில் அதிமுக தனித்தே களத்தில் நிற்கிறது என்று செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். இதனால் பாஜகவை அதிமுக கழற்றிவிட நினைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மைனாரிட்டிகள்
ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள், இதில் மைனாரிட்டிகளும், அருந்ததியர்களும் பாஜக கூட்டணி காரணமாக, அதிமுகவிற்கு வாக்களிக்காமல் திமுகவிற்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த லோக்சபா, சட்டசபை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தோற்க மைனாரிட்டி வாக்கு இழப்பு முக்கிய காரணமாக இருந்தது.
வாக்கு இழப்பு
அவர்களின் வாக்குகள் பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவிற்கு வரவில்லை. இதனால்தான் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் சரிந்துள்ளது என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இந்த வாக்குகளை கைப்பற்றும் விதமாகவே தற்போது எடப்பாடி பழனிசாமி பாஜகவை கழற்றிவிட துணித்துவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கில் பாஜகவை எதிர்பார்க்காமல் தேர்தல் பணிக்குழுவை அமைத்தது, சின்னம் கேட்டு வழக்கு தொடுத்தது என்று எடப்பாடி வேகம் காட்டி வருகிறார். பாஜகவை விட்டு அதிமுக வெளியேறுவதற்காகவே எடப்பாடி இப்படி வேகம் காட்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.