சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள்.. சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள்- கமல்ஹாசன்
ஈரோடு: சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள் என கமல்ஹாசன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவர் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, சிவகாசி, விருதுநகர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் வழியெல்லாம் அன்பிலே நீந்தி வந்தேன். இதுதான் உண்மை. முதல் முறையாக ஓட்டு போட போகும் இளைஞர்கள், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்று கட்சிகள்
இது இரண்டு கட்சிகளுக்கோ மூன்று கட்சிகளுக்கோ நடக்கக் கூடிய போட்டி அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். அதில் நீங்கள் நிற்க வேண்டியது நேர்மையின் பக்கம்தான். சாதி, மதம், பேதம் இல்லாமல் இங்கு கூடியிருக்கும் கூட்டம், கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. இவர்கள் கூடி கலைய போவதும் அல்ல.
மூத்த தலைமுறை
தமிழகத்தை தலை நிமிர செய்ய போகும் கூட்டத்தைத்தான் நான் இங்கு பார்க்கிறேன். இங்கு இருக்கும் இளைஞர்களின் முகத்தில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை பளிச்சிடுகிறது. கரம் கோர்ப்போம் இளைஞர்களே, தமிழகத்தை சீரமைப்போம். உங்கள் மூத்த தலைமுறையினர் செய்ய மறந்ததை இன்று செய்வோம்.
சாதிப்பவனை பார்த்து
சாதி பார்த்து ஓட்டு இடாதீர்கள். சாதிப்பவனை பார்த்து ஓட்டு இடுங்கள். அது நம் கடமை. ஓட்டு உங்கள் உரிமை. அகன்று நின்று வேடிக்கை பார்க்காதீர்கள். அரசியலில் உங்கள் கை பலம் தெரிய வேண்டும். அப்படி தெரிந்தால் நாளை நமதே. இங்கு என்னை போலவே நீங்களும் நம்பி வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஆணையிட்டால் அது நடக்கும்.
நாளை நமதே
நீங்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டீர்கள். தமிழகத்தை சீரமைக்கும் பணியில் உங்கள் கரமும் கோர்த்திருக்க வேண்டும். தயாராகுங்கள் இன்னும் 3 மாதங்கள்தான் இருக்கின்றன. நாளையை நமதாக்குங்கள். நான் உங்கள் ஆசியுடன் வெற்றி பாதையில் நடக்கிறேன் என்றார் கமல்ஹாசன்.