தாளவாடியை கர்நாடகா உடன் இணைக்க வலியுறுத்தி கன்னட அமைப்பினர் தமிழக எல்லையில் போராட்டம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி தமிழக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கர்நாடகா மாநில போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் தாளவாடி, உதகை, ஒசூர் ஆகிய பகுதிகளை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
மொழி வாரி மாநிலம்
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் போது கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள மக்கள் வாழும் கிராமங்கள் பல தமிழகத்துடன் இணைக்கப்பட்டதாக கன்னட அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
கும்பாரகுண்டி
இந்நிலையில் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கர்நாடகத்துடன் சேர்க்க வலியுறுத்தி கன்னட சலுவளி அமைப்பினர் வாட்டாள் நாகராஜ் உள்பட 40 ஆதரவாளர்கள் சத்தியமங்கலம்-மைசூர் எல்லையில், தமிழக-கர்நாடக எல்லையான கும்பாரகுண்டி பகுதிக்கு வந்தனர்.
வாட்டாள் நாகராஜ் அட்டூழியம்
தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற வாட்டாள் நாகராஜ் மற்றும் ஆதரவாளர்களை சாம்ராஜ் நகர் கிழக்கு போலீசார தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்திற்க எதிராக கோஷம் எழுப்பி அட்டூழியம் செய்தனர்.
நாகராஜ் கைது
இதையடுத்து கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட 40 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர். வாட்டாள் நகராஜ் ஏற்கனவே, தாளவாடி எல்லைக்கு வந்து, தமிழ் பெயர் பலகையை கிழித்து ரவுடித்தனம் செய்தார். மேலும் தாளவாடி மட்டுமல்லாமல் ஓசூரையும் கர்நாடகா உடன் இணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகிறார்.