உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்.. ஒலிக்கும் குரல்.. யார் தெரியுமா?
ஈரோடு: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு குரல் ஒலித்துள்ளது.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதி எம்எல்ஏவுமான தனியரசு, ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பலமுறை நடத்த ஏற்பாடு செய்தும் நடைபெறவில்லை. தற்போதும் கூட இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளது. அனைத்து கட்சியினர் கலந்தாலோசித்து உள்ளாட்சித் தேர்தலை வரும் 2021ம் ஆண்டு வரை ஒத்தி வைப்பது நல்லது என்று நினைக்கிறேன் .
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனால், அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இருவரும் 70 ஆண்டுகள் எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட சேராமல், எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் இருந்து கொண்டு, திடீரென அரசியல் அரியணையில் ஏற நினைப்பது தவறு.
அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படலாமே தவிர, முதல்வராக முடியாது. தமிழக மக்கள் இனி நடிகர் நடிகைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது. இவ்வாறு அவர் கூறினார்.