மொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: லாட்ஜின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் அதன் ஓனர் குணசேகர்! இந்த சம்பவம் இன்று ஈரோட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகர் 55 வயதாகிறது. கல்யாணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இன்னொரு பெண் காலேஜ் படித்து வருகிறார்.
ஈரோடு பஸ் ஸ்டேண்ட் அருகே அதாவது மேட்டூர் ரோட்டில் குணசேகரனுக்கு ஒரு லாட்ஜ் சொந்தமாக உள்ளது. 3 மாடி லாட்ஜ் இது. இதன் பெயர் ஈஸ்வரன்! குணசேகரின் முதல் அண்ணன் பெயர்தான் ஈஸ்வரன். 2-வது அண்ணன் பெயர் பழனிசாமி. ஆனால் 3 பேருமே இந்த லாட்ஜை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.
பஸ் ஸ்டேண்டிலேயே இந்த லாட்ஜ் உள்ளதால் சுற்றுவட்டாரத்தில் ஈஸ்வரன் லாட்ஜ் ரொம்பவும் பிரபலம். வழக்கமாக காலைல வாக்கிங் போகும்போதெல்லாம், குணசேகரன் லாட்ஜில் வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு, ஊழியர்களிடம் ஏதாவது தகவல், குறை இருக்கிறதா, என்று கேட்டுவிட்டு பிறகு கிளம்பி சென்றுவிடுவார்.
அப்படித்தான் இன்றைக்கும் காலையில் 7.30 மணிக்கு குணசேகர் வந்தார். வழக்கம்போல எல்லா ரூமையும் சுற்றி பார்த்து கொண்டே போனார். அப்படியே மொட்டை மாடிக்கு போய், அங்கிருந்து திடீரென கீழே குதித்துவிட்டார். இதில், கை, கால், முறிந்து, மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. ஒரு சில நிமிடங்களிலேயே அவரது உயிரும் பிரிந்துவிட்டது.
காலங்காத்தாலே அந்த வழியாக ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள், இதை பார்த்து அதிர்ச்சியில் பதறினார்கள். ஊழியர்களோ கதறிகொண்டே வெளியே ரோட்டுக்கு ஓடிவந்தனர். தகவலறிந்து ஈரோடு டவுன் போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
குணசேகரனுக்கு என்ன ஆச்சு? எதற்காக இந்த தற்கொலை? என்று உடனடியாக காரணம் தெரியவில்லை. எனினும் காலை நேரத்தில், இப்படி ஒரு தற்கொலையால் ஈரோடு நகரம் பரபரத்து காணப்படுகிறது.