சாதி மறுப்பு திருமணம்.. செய்து வைத்தவரை கடத்திய கும்பல்.. புதுமண தம்பதிக்கும் அடி உதை!
காதல் மணம் புரிந்த தம்பதியை கடத்தி உள்ளனர்
ஈரோடு: ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளது.. மேலும் புது மண தம்பதிகளையும் தாக்கி.. கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரி.. இங்கு வசித்து வருபவர் செல்வன்.. 26 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. கல்யாணமும் செய்ய முடிவு செய்தார்... இது ஒரு கலப்பு மணம் ஆகும்!
செல்வன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார்.. அதனால் அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார்.
சரவணபரத்
இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஈஸ்வரன் வீட்டிலேயே செல்வனும் இளமதியும் சாயங்காலம் 5 மணி வரை இருந்துள்ளனர். பிறகு செல்வனின் நண்பரான சரவண பரத் என்பவரை சந்திப்பதற்காக அங்கிருந்து இளமதியும், செல்வனும் சென்றனர்.
தாக்குதல்
இரவு 8.30 மணி இருக்கும்.. 4 ஆம்னி கார், ஒரு பொலேரோ, ஒரு இன்டிகா உட்பட 10-க்கும் மேற்பட்ட பைக்குகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வந்து ஈஸ்வரனை சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக அவரை காரில் ஏற்றி சென்றுள்ளனர். காரில் அழைத்து செல்லும்போது, செல்வனும் இளமதியும் எங்கே என கேட்டு அடித்தபடியே இருந்துள்ளனர்.. அவரது செல்போனையும் பறித்துள்ளனர்.
இளமதி
அதற்குள் பைக்கில் சென்று கொண்டிருந்த இளமதி - செல்வனை மற்றொரு கும்பல் பார்த்துவிட்டது.. கொளத்தூர் அருகே உள்ள உக்கம்பருத்திக்காடு என்ற பகுதியில் அவர்களை தாக்கி இளமதியை ஒரு காரிலும், செல்வனை ஒரு காரிலும் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டது.. புது மண தம்பதி தாக்கப்பட்டது குறித்து கொளத்தூர் ஸ்டேஷனுக்கு புகார் தரப்பட்டது.. போலீசாரும் விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
செக்போஸ்ட்
அப்போதுதான் ஆம்னி காரில் சில குறிப்பிட்ட கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கொளத்தூர் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.. நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி காரை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள்தான் தம்பதியை பிரித்தவர்கள் என்று தெரியவந்தது. அந்த காரிலும் கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது.
இளமதி எங்கே?
இளமதியும் செல்வனும் வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் என்பதால், கலப்புத் திருமணத்தை ஏற்கமுடியாமல் அவர்களை பிரிப்பதற்காக கடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதன்பின்னர், ஈஸ்வரனையும் செல்வனையும் போலீசார் மீட்டனர்... இளமதியை இன்னும் மீட்கவில்லை.. அதனால் அவரை கடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கொளத்தூர் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கலப்பு திருமணம் செய்து கொண்ட நண்பர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.