மேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..
Recommended Video
ஈரோடு: மேட்டூர் அணையிலிருந்து இன்று இரவு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி அங்குள்ள அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு வருகின்றன.
குடகில் காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தின் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள், சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் யாரும் குளிக்கக் கூடாது.
காவிரி ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டுவதோ மீன் பிடிப்பதோ நீரில் இறங்கி செல்பி எடுப்பதோ கூடாது. காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.