வண்டியை ஓட்டும்போதே நெஞ்சுவலியால் இறந்த டிரைவர்: விடிய விடிய ஓடிய லாரி என்ஜின்
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த மினி லாரி டிரைவர் வண்டியை ஓட்டும்போதே நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள உத்தண்டி கிராமம் கருக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரப்பன்(48). மினி லாரி டிரைவர். அவரது மனைவி கீதா. அவர்களுக்கு குழந்தை இல்லை.
அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மினி லாரியில் பிளாஸ்டிக் சீட்களை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்பினார். சனிக்கிழமை இரவு விராச்சிபாளையம்
அருகே செல்கையில் அவருக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லாரியை சாலையோரமாக கொண்டு சென்றார்.
அவரால் வண்டியின் என்ஜினை ஆஃப் செய்ய முடியவில்லை. அதனால் பிரேக்கை காலால் அழுத்தியபடி இருந்த அவரின் உயிர் பிரிந்துவிட்டது. இரவு முழுவதும் என்ஜின் ஆஃப் ஆகாமல் ஓடிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலையில் பொதுமக்கள் லாரியை பார்த்து சந்தேகமடைந்து மாரப்பனை எழுப்பினர். அப்பொழுது அவர் இறந்துவிட்டதை உணர்ந்த அவர்கள் சங்ககிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து மாரப்பனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.