கொரோனா வைரஸ் ஆண்டவன் கொடுத்த தண்டனை... அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு..!
ஈரோடு: கொரோனா வைரஸ் இறைவன் கொடுத்த தண்டனை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஆண்டவன் கொடுத்த தண்டனையை ஆண்டவனால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அதுவரை பொறுமை காப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, உதயகுமார், கருப்பணன் போன்றோர் பேட்டிகளின் போது தெரிவிக்கும் பல கருத்துக்கள் வைரலாவது வழக்கம்.
பாஜக தலைவர் கூட்டத்திற்கு.. கத்தியுடன் வந்த கும்பல்.. யார் இவங்க?.. வளைத்து பிடித்த போலீஸ்
கே.சி.கருப்பணன்
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் கே.சி.கருப்பணன். இவர் வகிக்கக் கூடிய துறையை பொறுத்தவரை மிகவும் சென்சிட்டிவானது. ஸ்டெர்லைட் ஆலை தொடங்கி ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ஆய்வு மையம், சாயக்கழிவு என நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தமிழகத்தை சுழன்று கொண்டிருக்கின்றன. ஆனால் பலருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் யாரென்றே தெரியாத அளவுக்கு செய்தியாளர்கள் பக்கம் தலைகாட்டாதவர் கே.சி.கருப்பணன்.
ஆற்றில் நுரை
இதற்கு காரணம் அவரது முந்தைய சர்ச்சைப் பேச்சுகள். இதனால் அவரை அடக்கி வாசிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது முதல்வர் முகாம். அப்படியென்ன சர்ச்சை கருத்தை கூறிவிட்டார் என நினைக்கிறீர்களா, நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகளால் நுரை படிந்து மாசுபடுவதாக எழுந்த புகார் குறித்து பதிலளித்த அமைச்சர் கருப்பணன், மக்கள் சோப்பு போட்டு குளித்த தண்ணீர் ஆற்றில் கலப்பதால் நுரை வந்ததாக புதுமை விளக்கம் அளித்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறைந்த நிதி
இதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் கருப்பணன், திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியை தான் ஒதுக்குவோம் என்றும் ஒன்றியத் தலைவர்களாக திமுகவினர் வெற்றிபெற்றாலும் ஆளுங்கட்சி நாங்கதான் எனப் பேசி வம்பில் சிக்கினார். விவகாரம் விஸ்வரூபம் எடுத்து ஆளுநர் வரை இதை கொண்டு சென்றது திமுக.
இறைவன் தண்டனை
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கருப்பணன், கொரோனா வைரஸ் என்பது ஆண்டவன் கொடுத்த தண்டனை என்றும் ஆண்டவன் அதை நிவர்த்தி செய்யும் வரை பொறுமை காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வழக்கம் போல் அமைச்சரின் இந்தப் பேட்டியும் வைரலாகி விட்டது.