லாக்டவுன் நாளில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஞாயிற்றுகிழமையான இன்று முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈரோடு பவானி கூடுதுறையில் நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: தளர்வுகள் அற்ற முழு லாக்டவுன் அமல்படுத்தப்படும் இந்த நாளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு போய் காவிரியில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. குலதெய்வ கோவிலுக்கு புனித நீர் எடுப்பதற்காகவே தான் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்ததாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் கிராமத்தை சேர்ந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.
லாக்டவுன் உள்ள இந்த நாளில் அமைச்சருக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றதாகவும், கோவில் பின் வாசல் வழியாக நுழைந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்ததாகவும் செய்திகள் பரவின.
காவிரி,பவானி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில், போலீஸ் பாதுகாப்புடன் அவர் புனித நீராடி சென்றதாகவும் வீடியோவுடன் செய்தி வெளியானது. தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், அமைச்சரின் நடவடிக்கையால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் தென்னகத்தின் காசி என்றழைக்கக்கூடிய பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தான் வந்தது ஏன் என்று அவரே விளக்கம் கொடுத்துள்ளார். சிவகாசியை அடுத்த மூளிப்பட்டியில் உள்ள தங்களது குலதெய்வமான சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீரை எடுக்க வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
சிலிர்க்க வைக்கும் பயணம்- மலையில் இருந்து 40 கிமீ தூரம்-காயம்பட்ட பெண்ணை சுமந்து வந்த ராணுவ வீரர்கள்
லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் பெரிய கோவில்கள் ஏதும் திறக்கப்படவில்லை. சிறிய கோவிகள் மற்றும் வழிபாட்டு தளங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மேலும் பெரிய கோவிகளில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விதிகளை மீறி அமைச்சர் புனித நீராடியதோடு கோவிலில் தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாட்களாக மஞ்சள் ஆடையுடன் வலம் வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இது குல தெய்வ கோவில் கும்பாபிஷேகத்திற்காக விரதம் இருக்கிறாரா? அல்லது குரு அருள் வேண்டி இருக்கும் விரதமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.