மழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு!
Recommended Video
ஈரோடு: மழை வேண்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம் நடத்தினார். இதில் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. குடிநீருக்கு கூட மக்கள் குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருவமழையும், கோடை மழையும் போதுமான அளவு பெய்யாததே இதற்கு காரணம். ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது வெப்பத்தை மட்டுமே தணிக்கிறதே தவிர குடிநீர் பற்றாக்குறையை போக்கவில்லை.
யாகம் நடத்த உத்தரவு
இந்நிலையில் மழை வேண்டி யாகம் நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அதிமுகவினருக்கு நேற்று உத்தரவு பிறப்பித்தனர்.
பச்சைமலை முருகன் கோவிலில்
இதைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பச்சைமலை பால முருகன் கோவிலில் அதிமுக சார்பில் சிறப்பு வருண யாகம் நடத்தினார்.
மதுரையில் யாகம்
இதில் ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் மதுரையில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் மழை வேண்டி யாகம் நடைபெறுகிறது.
ராஜன் செல்லப்பா தலைமையில்
திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் அதிமுக சார்பில் மழை வேண்டி வருண யாகம் நடைபெறுகிறது. இதில் ராஜன் செல்லப்பாவுடன் மேலுர் எம்எல்ஏ பெரிய புள்ளான் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர்.