31-ம் தேதி வரை நானும் பார்க்கமாட்டேன்... நீங்களும் வராதீங்க... வீட்டில் போர்டு வைத்த செங்கோட்டையன்
ஈரோடு: கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரும் 31-ம் தேதி வரை தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் போர்டு வைத்துள்ளார்.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்லும் நிலையில் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 15 நாட்களுக்கு பார்வையாளர்கள் சந்திப்பின்றி, கோரிக்கை மனுக்களின்றி அமைச்சர் செங்கோட்டையன் இல்லம் வெறிச்சோடி காணப்படும் நிலை உருவாகியுள்ளது.
கொரோனா பீதி
சர்வதேச அளவில் மனிதகுலத்தை ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். பொதுவிடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள்
இந்நிலையில் அதற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடுத்த 15 நாட்களுக்கு யாரையும் சந்திக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். இதற்கான போர்டை தனது வீட்டின் கேட்டில் வைத்துள்ள அவர், மார்ச் 31-ம் தேதி வரை பார்வையாளர்களும், கட்சியினரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை இல்லம், கோபிசெட்டிபாளையம் இல்லம் ஆகிய இரண்டு இல்லங்களுக்கும் யாரும் தன்னை தேடி வர வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
உதவியாளர்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லம் எப்போதும் கூட்டத்துடன் காணப்படும். அமைச்சர் ஊரில் இருந்தாலும் சரி சென்னையில் இருந்தாலும் சரி குள்ளம்பாளையம் இல்லத்தில் திருமண அழைப்பிதழ், கோரிக்கை மனுக்கள் என கொடுக்க நாள்தோறும் நூற்றக்கணக்கானோர் வந்து செல்வார்கள். அதனை செங்கோட்டையன் உதவியாளர் பெற்றுக்கொண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊருக்கு வரும் போது அவரது கவனத்துக்கு கொண்டு செல்வார். இந்நிலையில் அதற்கும் தற்போதும் வாய்ப்பு இல்லாததால் அவரது இல்லத்திற்கு செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
விமர்சனம்
அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ள போர்டை திமுக விமர்சிக்க தவறவில்லை. ஒரு அமைச்சர் இப்படி யாரையும் பார்க்கமாட்டேன் எனக் கூறி பதுங்குவது முறையல்ல என்றும், சென்னையில் சட்டமன்றத்திற்கு செல்லும் போது மட்டும் செங்கோட்டையனுக்கு கொரோனா வைரஸ் பற்றி அச்சமில்லையா எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது.