தொடரும் தாக்குதல்கள்.. பாஜக நிர்வாகி காருக்கு தீ வைப்பு.. சத்தியமங்கலத்தில் பரபரப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பாஜக நிர்வாகியின் வீட்டு
முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை, நள்ளிவில் மர்ம நபர்கள் தீ வைத்து
கொளுத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர்
மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும்
அலுவலகங்களை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தாக்குதல்
சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாஜக மற்றும்
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திடீரென நிகழ்த்தப்பட்டு வரும் இதுபோன்ற அசம்பவித சம்பவங்களால்,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம், தமிழக அரசு
முன்னெச்சரிக்கை நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில்
பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பாஜக நிர்வாகியின் காரை,
நள்ளிவில் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை
புளியம்பட்டியைச் சேர்ந்த பாஜக முன்னாள் நகர பொருளாளர் சிவசேகர் என்பவர்,
அப்பகுதியில் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். அவருக்குச் சொந்தமான 3
கார்களை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், சிவசேகர், நேற்று இரவு வெளியே சென்றுவிட்டு, தனது மாருதி
காரை, வீட்டின் முன்புறம் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு உறங்கச்
சென்றுள்ளார். திடீரென இரவு சுமார் ஒரு மணி அளவில், அவரது வீட்டின் வெளியே
ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அவர் வெளியே வந்து பார்த்தபோது,
வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் தீ பற்றி எரிந்து
கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசேகர், உடனடியாக சத்தியமங்கலம்
தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதன் பேரின் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்புத்துறையினர் கொழுந்து
விட்டு எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீச்சியடித்து தீயை
அணைத்தனர். எனினும், தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் முழுவதுமாக
எரிந்து எலும்புக் கூடாக காட்சியளித்தது.
இந்த சம்பவம் குறித்து புஞ்சை புளியம்பட்டடி காவல் நிலையத்தில் பாஜக
நிர்வாகி சிவசேகர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், காவல்துறையினர்
சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக
வழக்குப்பதிவு செய்து, நள்ளிரவில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த
காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏற்கேனவே கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள
நிலையில், புஞ்சை புளியம்பட்டியில் பாஜக நிர்வாகியின் காரை, மர்ம நபர்கள்
நள்ளிரவில் தீவைத்துச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.