நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துதான் போட்டி... கூட்டணி எதுவுமே இல்லை- சீமான் திட்டவட்டம்
ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் கன்னியாகுமரியில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், யாருடனும் கூட்டணி இல்லை என கூறியிருந்தார்.
ஈரோட்டில் ஆலோசனை
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களுடன் சீமான் ஆலோசனை நடத்தினார். அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். இச்சந்திப்பில் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சீமான் அளித்த பதில்:
234-ல் தனித்து போட்டி
யார் யாருடன் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். நான் மக்களுடன் கை கோர்க்கிறேன். நாங்க தனித்தே போட்டியிடுவோம். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம்.
ரஜினி-கமல் கூட்டணியால் மாற்றம் இல்லை
யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள், இல்லை என்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை. ரஜினிகாந்த், கமல் கூட்டணி வைத்தாலும் மாற்றம் வராது. எங்கள் கொள்கை, பாதை, பயணம் தனித்தது.
எங்களது தூய அரசியல் பாதை
ஆகையால் தனித்தே போட்டியிடுவோம். பெருந்தலைவர் வழியில், ஜீவானந்தம், சிங்காரவேலர், கக்கன் வழியில் நாங்கள் நேர்மையான தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.
இவ்வாறு சீமான் கூறினார்.