துரோகம், பதவி வெறி, சுயநலம்.. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஈரோடு: எடப்பாடி பழனிசாமியின் துரோகம், பதவி வெறி, சுயநலம் ஆகியவற்றை உணர்ந்து கொங்கு மாவட்ட மக்கள் இடைத்தேர்தல் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதேபோல் இரட்டை இலை சின்னம் செயல்படாமல் இருக்க எடப்பாடி பழனிசாமியே காரணம் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்த உள்ளனர்.
ஜனவரி 27.. மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் நிறைவு.. சு.வெங்கடேசன் கேட்ட கேள்வி!
அமமுக போட்டி
அதுமட்டுமல்லாமல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சார்பாக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமமுகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சி
இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த 20 மாதங்களாக திமுக ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என ஏராளமான பாதிப்புகள் இருக்கின்றன. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் திமுக எதையுமே நிறைவேற்றவில்லை. அதற்கு தயாராகவும் இல்லை.
நம்பிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை என்ன தான் ஆட்சி அதிகாரம், கூட்டணி பலம் இருந்தாலும், மக்கள் எப்படி ஆர்கே நகர் தேர்தலில் வாக்களித்தது போல், ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
இபிஎஸ்-க்கு பாடம்
தொடர்ந்து அதிமுகவின் இடைத்தேர்தல் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி பணபலத்தை நம்பி ஈரோடு கிழகு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னம் செயல்படாமல் இருக்க எடப்பாடி பழனிசாமியே காரணம். அதனால் கொங்கு மாவட்ட மக்கள் எடப்பாடி பழனிசாமியின் துரோகம், பதவி வெறி, சுயநலம் உணர்ந்து அவருக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். என்ன தான் பணபலம் இருந்தாலும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
அமமுக வெற்றிவாய்ப்பு
தொடர்ந்து அமமுகவின் வெற்றிவாய்ப்பு பற்றிய கேள்விக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரிய அளவில் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு வெற்றிகரமானதாக அமையும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.