ரீவைண்ட் 2020.. கிணற்றில் குதித்த கைதி முதல் பணக்கார லிஸ்டில் இடம்பெற்ற டாக்டர் வரை.. ஈரோடு டாப் 10
ஈரோடு: 2021 புதுவருடம் பிறக்க உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டு நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்.
Recommended Video
ஈரோடு மாவட்டத்தில் டாப் 10 இடங்களில் இருக்கும் சம்பவங்கள் பின்வருமாறு:
1. கைது செய்ய வந்த போலீஸ்.. கிணற்றில் குதித்த கைதி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அங்கணகவுண்டன்புதூர் கிராமம் ராமர்கோவில் வீதியைச் சேர்ந்தவர் பத்திரப்பன். பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காரணமாக தன்னை கைது செய்வதற்காக. போலீசார் வருவதைக் கண்டு பயந்த பத்திரப்பன் தப்பிப்பதற்காக வீட்டுக்கு முன்புறமாக உள்ள 25 அடி கிணற்றில் குதித்தார். இதைக்கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
2. 31-ம் தேதி வரை நானும் பார்க்கமாட்டேன்... நீங்களும் வராதீங்க... வீட்டில் போர்டு வைத்த செங்கோட்டையன்
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வரும் 31-ம் தேதி வரை தன்னை யாரும் சந்திக்க வேண்டாம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் போர்டு வைத்தார் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க அவரது இல்லத்திற்கு செல்லும் நிலையில் இந்த போர்டு வைக்கப்பட்டது. இதனால் 15 நாட்களுக்கு பார்வையாளர்கள் சந்திப்பின்றி, கோரிக்கை மனுக்களின்றி அமைச்சர் செங்கோட்டையன் இல்லம் வெறிச்சோடி காணப்படும் நிலை உருவாகியது.
3. ஜெபம் செய்ய போறேன்.. கொரோனாவை ஒழிச்சு சுகம் தர போறேன்.. "குட்டி யானை"யில் வலம் வந்த ராணி.. மடக்கி பிடித்த போலீஸ்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது குறிச்சி வாய்க்கால்மேடு பகுதி. இங்கு மேசிய என்ற பெயரில் ஜெப வீடு நடத்தி வருபவர் ராணி. இவர் செல்லிக் கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை.இவரது கணவர் ஜெயராமன், பர்கூர் ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் ஜெபக்கூட்டம் நடத்துவதற்காகவே குட்டியானையில் வலம் வந்துள்ளார் கொரோனாவை ஒழிக்க கூட்டு ஜெபம் நடத்தி பாட்டு பாடிக் கொண்டு வந்த இவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
4. புகார் அளிக்க வரும் பொதுமக்களின் குழந்தைகள் விளையாட புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டம், பவானி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் குழந்தைகள் விளையாட புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்று பலமுறை கேள்விப்பட்டும் விலகியே நின்ற மனது உண்மையிலேயே நண்பனைக் கண்டு கொண்ட சந்தோஷத்துடன் இருக்கின்றது என ஈரோடு பவானி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
5. கண்களுக்கு விருந்து.. பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருந்த பெலிகான் பறவைகள்
பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பெலிகான் பறவைகள் முகாமிட்டன. காலை மற்றும் மாலை நேரங்களில் பெலிகான் பறவைகள் அணையின் நீர்தேக்கப் பகுதியில் காற்றின் வேகத்தில் அலை அடிப்பதால் அதில் வரும் மீன்களை கொத்தி உண்பதற்காக காத்துக் கிடந்தன. அணையின் நீர்த் தேக்க பகுதியில் பெலிகான் பறவைகள் முகாமிட்டுள்ள காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
6. என்னதிது.. வெள்ளையா பெருசா.. பக்கத்துலயே சுடுகாடு வேறு இருக்காமே.. அலறி ஓடிய ஈரோட்டு மக்கள்!
ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்ளே வரும் வழியில் சாலையை அகலப்படுத்தும் பணிக்காக ஒரு சிமெண்ட் மூட்டை பை வைக்கப்பட்டிருந்தது.. அந்த பையில் இருந்து சிறியதாக வெள்ளை கலரில் ஒரு உருவம் தோன்றியது. சின்னதாக தோன்றிய அந்த உருவம் கிட்ட வர வர பெரிசாகி கொண்டே வந்தது. நடுரோட்டில் ஒரு வெள்ளை உருவம் பூதாகரமாக வந்து கொண்டே இருந்தது. பிறகு திடீரென எதிரே வந்து கொண்டிருந்த ஒரு காரில் மறைந்துவிட்டது. சிசிடிவியில் இதனை பார்த்த போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது. பக்கத்திலேயே சுடுகாடு இருப்பதால் இன்னும் அள்ளு கிளம்பி உள்ளது.. அந்த செக் போஸ்ட்டில் இருக்கும்போதே கிலியால் உறைந்தும் உள்ளனர்.. அது என்ன பேயா? பிசாசா என தெரியவில்லை.தற்போது வரை ஈரோட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறது இந்த வீடியோ
7. 10 சக்கர லாரியா?.. 12 சக்கர லாரியா?.. பண்ணாரி செக் போஸ்ட்டில்.. லஞ்சம் வசூல் வேட்டை
பண்ணாரி செக்போஸ்ட்டில்.. ராத்திரி நேரத்தில்.. டயர்கள் அடிப்படையில் லாரிகளை தரம் பிரித்து லஞ்சம் வாங்கி உள்ளனர் ஊழியர்கள். இது குறித்த வீடியோ வெளியாக செக்போஸ்ட்டில் ஆய்வாளர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டார்.
8. எங்க.. என்னை கடந்து போங்க... தாளவாடி மலையில் தனிஒருவனாய் வாகன ஓட்டிகளை தெறிக்கவிட்ட யானை
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் தமிழக-கர்நாடக எல்லையில் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவரை சாலையோரம் நின்றிருந்த ஒற்றையானை ஆவேசத்துடன் துரத்தியது. ஒற்றை யானை துரத்தியதை கண்ட இளைஞர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடினர்.
9. ஓகே..வா.. நல்லா புடிச்சுக்கோ.. வாடா.. வாடா.." சத்தியமங்கலத்தை பரபரப்பாக்கிய மாரிமுத்து
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அங்கண கவுண்டன் புதூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது ஆடு கிட்டத்தட்ட 70 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்தது. தான் ஆசையாய் வளர்த்த ஆடு கிணற்றில் விழுந்ததால் பதறிய மாரிமுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த வீரர்கள் கயிறு கட்டி ஆட்டை மீட்டனர்.
10. இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண் சாதனை!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த பெண்ணின் சொத்து மதிப்பு 2,870 கோடி ரூபாய் ஆகும். அவரது பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தின் முன்னாள் மாணவியாவார். இந்த தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 10 சம்பவங்கள்தான் 2020-ஆம் ஆண்டு முழுவதும் ஈரோடு மக்களை சுவாரஸ்யப்படுத்தி வந்தது.