ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக சாணியடி.. தாறுமாறு தாளவாடி.. ஐயோ பாவம் கொரோனா!
ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணத்தால் அடித்துக்கொள்ளும் சாணியடி திருவிழா வெகு ஜோராக நடந்தது. ஆனால் கொரோனா விதிதான் காணாமல் போய்விட்டது.
Recommended Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மூன்றாவது நாள் சாணியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இன்று காலை வழக்கம்போல் விழா தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 100 பேருக்கு மேல் திருவிழாவில் பங்கேற்க கூடாது என வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் இன்று மாலை கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடினர். கிராமம் முழுவதும் சேகரிக்கப்பட்ட மாட்டுச்சாணத்தை இரு இடங்களில் கொட்டப்பட்டு அதில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் மாட்டுச் சாணத்தை உருண்டை செய்து ஒருவருக்கொருவர் அடித்து விளையாடி மகிழ்ந்து விளையாடினர்.
சுமார் ஒரு மணி நேரம் சாணி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாணி அடிக்கும் நிகழ்வில் ஈடுபட்ட சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் அங்குள்ள குளத்தில் சென்று குளித்துவிட்டு கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.
சாணியடி திருவிழாவில் பயன்படுத்தப்படும் சாணத்தை எடுத்து விளைநிலங்களுக்கு போட்டால் விவசாயம் செழிக்கும் என ஐதீகம் உள்ளதாக ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 100 பேர் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென போலீசார் உத்தரவிட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.